கொடுமையான இந்த காலத்தில் பெட்ரோல் விலையை உயர்த்தும் கொடுமையை மத்திய அரசு செய்யலாமா..? திருமாவளவன் ஆவேசம்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் இந்த நேரத்தில் பெட்ரோல்,டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்திக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டித்து திருமாவளவன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


பெட்ரோல்,டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்துகிற நடை முறையைத் தமிழக அரசு இப்போது கடைபிடித்து வருகிறது. கடந்த 8 நாட்களில் லிட்டருக்கு சுமார் ஐந்து ரூபாய் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்திருக்கிறது. கொரோனா பேரிடர் நேரத்தில் மக்களை கசக்கிப் பிழியும் விதமாக இந்த விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். 

இந்தப் பேரிடர் காலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கோ புலம்பெயர் தொழிலாளர்களுக்கோ எந்த ஒரு நிவாரணத்தையும் மோடி அரசு அளிக்கவில்லை. இதனால் மக்கள் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே வறுமையில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது மோடி அரசு.

மத்திய அரசு மார்ச் மாதத்தில் எக்சைஸ் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது.மே மாதத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாயும் எக்சைஸ் வரி உயர்த்தப்பட்டது. 

 உலகில் எந்த ஒரு நாடும் தனது குடிமக்களை இந்தப் பேரிடர் காலத்தில் இப்படி கொடுமைப்படுத்தவில்லை. ஈவிரக்கமற்ற அரசாக மத்திய அரசும் அதற்கு ஏற்ப தாளம் போடும் அரசாக தமிழக அரசும் இருந்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் தட்டிக் கேட்க முடியாதபடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த மக்கள் விரோத விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைத் தடுக்க முடியாது என்கிறார் திருமா.