பெரியகோயில் குடமுழுக்கை முதலில் தமிழில் நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும் - அரசுக்கு சீமான் கோரிக்கை

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமயத் துறை மேற்கொண்டுவருகிறது. அதில், முதலில் தமிழில்தான் வழிபாடு நடத்தவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.


அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பு முழுமையான நிறைவைத் தராவிட்டாலும், சற்றே மன ஆறுதலைத் தந்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் நெறிப்படியே நடத்தவேண்டும் என நா.த.கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக செந்தில்நாதனும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு சார்பாக பெ.மணியரசனும் பிற தமிழ் ஆர்வலர்களும் வழக்குத்தொடுத்ததைக் குறிப்பிட்டுள்ள அவர், ஆதிபாட்டன் சிவனைப் போற்றித் தொழும் இக்குடமுழுக்கில் தமிழர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, தமிழ் கோபுரமேறுவதைக் கொண்டாடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், ” 'உன் நிலத்தில் உன் மொழி ஆள வில்லையென்றால், நீ அடிமை' என்கிறார் அண்ணல் காந்தியடிகள். நிலம், அதிகாரம், நீதி, வழிபாடு என எந்த நிலையிலும் எமதுயிர் மொழி தமிழ் இல்லாது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. அதன் விளைவாகவே அடிமைத் தேசிய இனத்தின் மக்களாக இன்று மாறி நிற்கிறோம். தமிழ்ப் பேரரசன் அருண்மொழிச்சோழன் தமிழர் நிலத்திலே கட்டியெழுப்பியுள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழிலேயேதான் நடத்தவேண்டும் எனும் தார்மீக உரிமையையே கோரிக்கையாக முன்வைத்துப் போராடுகின்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டு நிற்கிறோம்.

தமிழுக்கு இடப்பட்டிருக்கிற இத்தளையைப் போக்கவும், தமிழ்ப் பேரினத்தின் அடிமை விலங்கொடிக்கவும் அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் பன்னெடுங்காலமாகப் போராடி வருகிறோம். அந்தவகையில், தற்போது கிடைத்திருக்கிற நீதிமன்றத் தீர்ப்பு முழுமையான வெற்றி இல்லாவிட்டாலும், முன்னேற்றத்திற்கான முதற்படிதான்!

உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது தமிழுக்குக் கிடைத்த முதல்படி வெற்றிதான் என்றாலும்கூட, அனைத்து நிலைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படுவதை தமிழக அரசு உறுதிசெய்யவேண்டும் என்பதுதான் உலகத்தமிழர்களின் ஒற்றை விருப்பம். கோயிலின் கருவறை, கலசம், கொடிமரம், யாகசாலை, அர்த்த மண்டபம் ஆகிய ஐந்து இடங்களிலும் சமசுகிருதத்துக்கு இணையாக தமிழ் மொழி பயன்படுத்தப்படும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

ஆகவே, அதை மெய்ப்பிக்கும் வகையில், சமசுகிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில், தமிழ் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும், அனைத்து இடங்களிலும் சமசுகிருதத்துக்கு இணையாக தமிழுக்கும் சமமான கால அளவு கொடுக்கப்பட வேண்டும் எனவும், சமசுகிருதத்திற்கு எவ்விதத் தனிப்பட்ட முதன்மைத்துவமும் வழங்கப்படக்கூடாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அவற்றைக் கடைப்பிடித்து, முதலில் தமிழில் குடமுழுக்கு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.” என்றும் சீமான் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.