இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்கு அழுத்தம் தரவேண்டும் என்று முக்கிய கட்சிகளுக்கு மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
அனைத்துக் கட்சிகளுக்கும் ஸ்டாலின் கடிதம்.. இட ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு அழுத்தம் குடுங்க…

இட ஒதுக்கிடு தொடர்பாக மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனவே இந்த தீர்ப்பையொட்டி சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கோரி, சோனியா காந்தி, சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, தேவ கவுடா, லாலு பிரசாத் யாதவ், ஜெகன் மோகன் ரெட்டி, கே.சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்ரே, மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்கு பேசியதுடன் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அதன்படி இன்று ஸ்டாலின் வெளியிட்டு அறிவிப்பில், ‘உடனடியாக, கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துவது, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவ இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது, மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாப்பது போன்றவற்றை வலியுறுத்தியுள்ளார்.