ஹெல்மெட் அபராதத்துக்கு இப்படியொரு தீர்வா! போலீஸ் யோசிக்கலாமே?

இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். என்று சட்டம் போட்டுவிட்டு, அதனை தீவிரமாக கண்காணிக்கவும் செய்கிறது நீதிமன்றம்.


ஹெல்மெட் போடாதவரின் ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்ய, தமிழக அரசு அதனை ஏற்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதில் எளிதான தீர்வு ஒன்று இருக்கிறது. ஆம், ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்வதற்கு பதிலாக, ஹெல்மெட் இல்லாத வாகன ஓட்டிகளிடம், ரூ.500 அல்லது ரூ.1000 ரூபாய் ஃபைன் வாங்கிக்கொண்டு ஒரு நல்ல தரமான தலைக்கவசத்தை கொடுத்து, அணிய வைக்கலாம்... 

இதனால் மறுமுறை அவர், நிச்சயம் தலைக்கவசம் இல்லாமல் வரமாட்டார். அப்படியே வந்தாலும் பரவாயில்லை, மீண்டும் அவரிடம் பணம் வாங்கி இரண்டாவதாகவும் தலைக்கவசத்தை கொடுக்கலாம். இப்படி எத்தனை முறை தலைகவசம் இல்லை என்றாலும் தலைகவசம் கொடுத்துக்கொண்டே இருக்கலாம்.

தொடர்ந்து ஹெல்மெட் வாங்க விருப்பமில்லாமல், நிச்சயம் அவரே தலைக்கவசம் கொண்டுவந்து விடுவார். அதேபோல் வாகன இன்சூரன்ஸ் விஷயத்திலும் இதையே கடைபிடிக்கலாம். இன்ஸ்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.700/- அல்லது ரூ.1000/- வாங்கிகொண்டு இன்சூரன்ஸை போட்டு கொடுக்கலாம். மறுபடி நிச்சயம், அவர் இன்சூரன்சோடுதானே வருவார்...

அதே போல் ஓட்டுநரின் உரிமம் இல்லாமல் வந்தால், அதற்கும் பணம் வாங்கிக்கொண்டு போட்டு கொடுக்கலாம். இப்படி செய்தால் ஒரு வருடத்தில் அனைவரும் அனைத்தும் வைத்து இருப்பார்கள். இதையும் மீறி பார்த்தால், போலீஸார்களும் வழக்கறிஞர்களும் மட்டும்தான் லைசென்ஸ், ஹெல்மெட் போடாமல் இருப்பார்கள். அவர்கள்தான் மேன்மக்கள் ஆயிற்றே... அப்படியே விட வேண்டியதுதான்.