சீமான் கட்சியுடன் விஜய் கூட்டணி உறுதி..?

ஒருவருக்கொருவர் பாராட்டு


வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சீமானும் விஜய்யும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இரண்டு ரசிகர்களிடமும் இருக்கிறது. இந்த நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, விஜய் பாராட்டு தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய்க்கு உடனடியாக மனமார்ந்த நன்றி தெரிவித்திருக்கிறார் சீமான். அவர், ‘மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி! உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ‘நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி எனும் இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.

‘தமிழ்த்தேசியம்’ எனும் உயரிய தத்துவ முழக்கத்தை எம் முன்னோர்களும், மூத்தோர்களும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தூக்கிச் சுமந்தபோதும், அக்கருத்தியல் முழக்கம் வெகுமக்கள் வடிவம் பெறாமலேயே இருந்தது. அந்தப் போதாமையையும், குறைபாட்டையும் முற்றிலும் போக்கி, தமிழ்த்தேசியத்தை வெகுமக்கள் அரசியலாக்கி, தேர்தலிலே களம் கண்டது நாம் தமிழர் கட்சி.

2016ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, எட்டே ஆண்டுகளில் மாநிலக் கட்சியாகப் பரிணமித்திருப்பது தமிழினஅரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்! சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி எனப் பல அடக்கு முறைகளைத் தாண்டியும், சாதி, மதம், மது, பணம் எனப் புரையோடிப்போன சமூகத்தீங்குகளைக் கடந்தும் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளென்பது பெரும் சனநாயக மறுமலர்ச்சியாகும்.

இத்தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதியேற்கிறோம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,600,088 மதிப்புமிக்க வாக்குகளைத் தந்து, நாம் தமிழர் கட்சியைப் பெரும் அரசியல் ஆற்றலாக உருவெடுக்கச் செய்த தாய்த்தமிழ்ச் சொந்தங்கள், போற்றுதற்குரிய பெருமக்கள், வேட்பாளர்களாகக் களத்தில் நின்ற எம் உடன்பிறந்தார்கள், எல்லாவுமாகத் துணைநின்ற அன்பிற்கினிய உறவுகள், உயிரைக் கொடுத்து உழைத்த உயிருக்கினிய தம்பி, தங்கைகள் என அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளையும், உளப்பூர்வமான அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

விஜய் ரசிகர்களும் நாம் தமிழர் தம்பிகளும் கூட்டணிக்கு ஆசைப்படுகிறார்கள். சீமானும் விஜய்யும் என்ன முடிவு எடுப்பார்கள் என்று பார்க்கலாம்.