சுங்கக்கட்டணம் வசூலுக்கு நீதிமன்றம் சாட்டையடி… ராமதாஸ் வரவேற்பு

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை - வாலாஜாபேட்டை இடையிலான பகுதி ஆண்டுக்கணக்கில் சீரமைக்கப்படாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் அடுத்த இரு வாரங்களுக்கு 50% சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. சாலைகளை முறையாக பராமரிக்காத நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு இதை விட மோசமான தண்டனை இருக்க முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சென்னை - வாலாஜாபேட்டை பகுதி மோசமாக பராமரிக்கப்படுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு, நீதியரசர்கள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரவாயல் - வாலாஜாபேட்டை நெடுஞ்சாலை நெடுங்காலமாக சீரமைக்கப்படாமல் இருப்பது ஏன்? என்று நீதிபதிகள் வினா எழுப்பினர். அதற்கு விடையளித்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், அடுத்த 10 நாட்களில் சாலை சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தது. அதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அடுத்த இரு வாரங்களுக்கு சுங்கக்கட்டணத்தை பாதியாக வசூலிக்க ஆணையிட்டுள்ளனர்.

சென்னை மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பராமரிக்கும் விதம் தொடக்கம் முதலே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பெங்களூர் முதல் வாலாஜா வரையிலான சாலை 6 வழிச்சாலையாக இருக்கும் நிலையில், அதன்பிறகு 4 வழிச்சாலையாக சுருங்கி விடுகிறது;

திருப்பெரும்புதூருக்குப் பிறகு குண்டும், குழியும் நிறைந்த சாலையாகி விடுகிறது. திருப்பெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில் அங்கு வந்து செல்லும் கனரக வாகனங்களை தாங்கும் வகையில் தரமாக சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்; சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகள் 100 ஆண்டுகள் வரை உழைத்தன. ஆனால், சென்னை - வாலாஜாபேட்டை சாலை பயணிக்கவே தகுதியற்ற சாலையாகவே உள்ளது. சென்னை - வாலாஜா சாலை மட்டும் தான் என்றில்லை... மற்ற சாலைகளின் பராமரிப்பும் அப்படித் தான் உள்ளன. திண்டிவனம் - கிருட்டினகிரி தேசிய நெடுஞ்சாலை 2010-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிக்கப்படவில்லை.

உளுந்தூர்ப்பேட்டை- சேலம் இடையிலான 136 கி.மீ நீள நான்குவழிச் சாலை முறையாக பராமரிக்கப் படுவதில்லை என்பதுடன், எட்டு இடங்களில் புறவழிச்சாலைகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இருவழித்தடமாக உள்ள புறவழிச்சாலையில் ஏராளமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகள் குறித்து மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின்கட்கரி, நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோருக்கு கடந்த ஆண்டு திசம்பர் 7-ஆம் தேதி கடிதம் எழுதினேன். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சிக்கான பாதைகள். அவை சேதமடைந்திருப்பது வளர்ச்சியை தடுக்கும். எனவே, சென்னை - வாலாஜா சாலையில் உள்ள குழிகளை அடுத்த இரு வாரத்திற்குள் சரி செய்ய வேண்டும்; ஆனால், இது மட்டுமே போதாது. சென்னை - வாலாஜா சாலையை 6 வழி சாலையாகவும், அதில் திருப்பெரும்புதூர் - மதுரவாயல் பகுதியை 6 வழி சிமெண்ட் சாலையாகவும் விரிவாக்குவதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். திண்டிவனம் - கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டை- சேலம் நெடுஞ்சாலைகளையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.