நூற்றாண்டை தொடப்போகிறார் பேராசிரியர் அன்பழகன்! ஸ்டாலினும் வைகோவும் வாழ்த்து!

கழகத்தின் பொதுச்செயலாளர்,- அறிஞர் அண்ணா அவர்களின் அருமைத் தம்பி,- தலைவர் கலைஞரின் இலட்சிய சகோதரர் -என்றெல்லாம் பாராட்டப்படும் பேராசிரியர் அன்பழகனுக்கு இன்று 98ம் ஆண்டு பிறந்த நாள் விழா.


அவர் சீரோடும் சிறப்போடும், எழிலோடும் ஏற்றத்தோடும், திராவிட இன - மொழி உணர்வோடும் கொண்டாடப்படுகிறது. இன்று ஸ்டாலின் கொடுத்திருக்கும் வாழ்த்து செய்தி இது. திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் தேர்தல் களத்தைச் சந்தித்த 1957 பொதுத்தேர்தலில் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோருடன் வெற்றி பெற்ற 15 பேரில், நமது பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியரும் ஒருவர்.

அதன்பிறகு, வெற்றிகளையும் தோல்விகளையும் தேர்தல் களங்களில் சந்தித்திருந்தாலும், இரண்டையும் சமமாக ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று, திராவிட அரசியல் தத்துவப் பாடம் நடத்திய தகுதி நிறைந்த பெருமை பேராசிரியருக்கு உண்டு. சட்டமன்றத்தில் அவர் முன் வைத்த வாதங்கள் அழுத்தமானவை.

நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய உரிமைக் குரல்கள் வலுவானவை. அமைச்சராக அவர் நிறைவேற்றிய திட்டங்கள் என்றும் பயனளிப்பவை. இவை அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஏந்தியிருக்கும் சித்தாந்தத்தின் வழியே செயல்படுத்திக் காட்டுவதில் பேராசிரியப் பெருந்தகை அவர்கள் உறுதியாக இருந்தவர்.

பேராசிரியர் ஆயிற்றே! அவரிடம் மதிப்பெண்கள் பெறவேண்டுமென்றால் கடுமையாக உழைக்க வேண்டும். அவர் வைக்கும் தேர்வுகளை நல்ல முறையில் எழுதிட வேண்டும். 1980-களின் தொடக்கத்தில் தி.மு.கழகத்தின் இளைஞரணி உருவாக்கப்பட்டபோது, என்னுடைய பணியினைப் பார்த்து, அலசி, மதிப்பிட்டு, பாராட்டு என்கிற மதிப்பெண்ணை வழங்கினார். அவர் வைத்த தேர்வு என்பது மிக முக்கியமானது. கழகத்தின் தலைமை அலுவலகமாக இருந்த அன்பகத்தை இளைஞரணிக்காகக் கோரினோம்.

கழகத்தின் மற்ற அணியினர் சிலரும் அதே கோரிக்கையை வைத்தனர். பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள், கழக நிதியாக 10 இலட்சம் ரூபாய் திரட்டிக் கொடுக்கும் அணிக்கே அன்பகம் என்ற தேர்வினை வைத்தார்கள். அந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு,

சைக்கிளில் சென்று தொண்டர்களைச் சந்தித்து, நடையாய் நடந்து கிராமங்களுக்குச் சென்று, மோட்டார் சைக்கிளில் சிறுநகரங்களை அடைந்து, இளைஞரணி நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், கொடியேற்றல், படிப்பகங்கள் திறந்து வைத்தல் எனப் பல பணிகளை நிறைவேற்றி, அவற்றுக்கான பங்கேற்புக் கட்டணமாகத் திரட்டிய நிதியைக் கொண்டு, பேராசிரியர் இலக்காக நிர்ணயித்த 10 இலட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக, 11 இலட்சம் ரூபாயை நிதியாகத் திரட்டித் தந்து, இளைஞரணிக்கு அன்பகத்தை சொந்தமாக்கியதை என்னால் என்றென்றும் மறக்கவே முடியாது.

இளைஞரணிச் செயலாளராக இருந்த என்னிடம் பேராசிரியர் பெருந்தகை காட்டிய அன்பு கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக, பொருளாளராக உயர்ந்த ஒவ்வொரு நிலையிலும் அப்படியே வெளிப்பட்டது. உங்களில் ஒருவனான நான் இன்று கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பினை சுமந்திருக்கும் நிலையிலும், அதே அன்பை, அன்பின் ஆழத்தை தன் உடல்நிலையையும் மீறி, உள்ளம் திறந்து வெளிக்காட்டி, உவகை கொள்ள, பேராசிரியர் அவர்கள் ஒரு போதும் தயங்கியதே இல்லை.

2018 ஆகஸ்ட் 7-ஆம் நாள் தலைவர் கலைஞர் அவர்களை இயற்கை சதி செய்து நம்மிடம் இருந்து பிரித்த நிலையில், என்ன செய்யப்போகிறோம், எப்படிச் செயலாற்றப் போகிறோம் எனத் தவித்து நின்றபோது, தந்தையின் இடத்திலிருந்து என்னை ஆறுதல்படுத்தி, அரவணைத்து, வாஞ்சையுடன் வழிகாட்டியவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியதிலிருந்தே எனக்கு ஆலோசனைகள் வழங்கி, இயக்கப் பணிகள் தொய்வின்றி நடைபெறச் செய்ததுடன், தலைவர் கலைஞர் அவர்களை அடிக்கடி சந்தித்து, அவரது இதயத்துக்கு இதமளித்தவர் இனமானப் பேராசிரியர்.

“சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ” என்கிற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகளைப் போல, சித்தாந்தச் சிங்கமாக கர்ஜித்த - இயக்கமே குடும்பம் எனக் கொண்ட - எப்போதும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத - நேற்றைய தலைமுறை முதல் நாளைய தலைமுறை வரை கடைப்பிடிக்க வேண்டிய இலட்சியத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கிற இனமானப் பேராசிரியர் அவர்கள், திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களில் அதிக காலம் வாழ்ந்து அற்புதமாக வழிகாட்டிக் கொண்டிருப்பவர் என்ற பெருமையுடன்,

98-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுடன் இணைந்து, உங்களில் ஒருவனான நானும் பேராசிரியரை வணங்குவதிலும் வாழ்த்துவதிலும் வற்றாத இன்பமும் வாடாத மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இன்று ம.தி.மு.க.வில் இருந்து வைகோவும் நேரில்வந்து அன்பழகனுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டுள்ளார்.