திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தில் 6 பேர் அடுத்தடுத்து மரணம்! தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள்! சிக்கிய மருமகள்! ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு விஷம்! மாநிலத்தையே அதிர வைத்த கொலைகள்!

கோழிக்கோடு மாவட்டம், கூடாத்தி கிராமத்தில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி டாம் ஜோஸ். இவர், கடந்த 2008ம் ஆண்டில் திடீரென உயிரிழந்தார். இதற்கு முன்பாக, 2002ம் ஆண்டில் இவரது மனைவி அன்னம்மா உயிரிழந்தார்.
2012ம் ஆண்டில் ஜோஸின் மகன் ராய் தாமஸ் மர்மமான முறையில் உயிரிழந்தார். தாமஸின் 10 மாத கைக்குழந்தை மகள் அடுத்த சில மாதங்களில் உயிரிழந்தாள். இதுதவிர, ஜோஸின் மைத்துனர் மேத்யூ மஞ்சாடியும் உயிரிழந்தார்.
இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து, மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, ஜோஸின் மற்றொரு மகனும், தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான ரோஜோ வடகரை போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தற்போது இதற்கு காரணமான பெண் குற்றவாளியை கைது செய்துள்ளனர். ஜோலி அம்மா ஜோசப் என பெயருடைய அந்த பெண், ஜோஸின் மகன் ராய் தாமஸின் முன்னாள் மனைவி ஆவார். தற்போது 47 வயதாகும் அவர், தனது முன்னாள் கணவன் ராய் ஜோசப்பின் குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கில், கடந்த 12 ஆண்டுகளாக , திட்டம் போட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சயனைடு கலந்துகொடுத்து கொன்றதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து, ஜோலியை கைது செய்த போலீசார், அவருக்கு சயனைடு விநியோகித்த நபர், சயனைடு கொள்முதல் செய்த நபர் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.