எங்களுக்கு ஆண் தேவதை, ராகுல் காந்தி - உருக்கிய நிர்பயாவின் தந்தை!

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவரான நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கொலையும்செய்த குற்றவாளிகள் நான்கு பேருக்கும் நேற்று தூக்குதண்டனை அளிக்கப்பட்டது.


இந்நிலையில் நிர்பயாவின் தந்தை, காங்கிரஸ் பிரமுகர் இராகுல் காந்தி தங்களுக்கு ஆண் தேவதையாக விளங்குவதாக பேட்டி அளித்துள்ளார். இது குறித்து தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கைய் விவரம்: 

“ நிர்பயா வழக்கில் கைதான 6 பேரில் உயிரோடு இருந்த 4 பேருக்கு 7 ஆண்டுகள் கழித்து நேற்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கடுமையான குற்றத்திற்கு கடுமையான தண்டனை விதிப்பதை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.

தன் மகள் வன்புனர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட பின் நடைபிணமாக இருந்த தங்களுக்கு, உணர்வுப்பூர்வமாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவி செய்தவர் திரு. ராகுல் காந்தி என, நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் மெய்சிலிர்க்க தற்போது நினைவு கூர்ந்துள்ளார். அதேசமயம், இந்த உதவியை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு ராகுல்காந்தி கண்டிப்பாக கூறியதையும் பத்ரிநாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தண்டனை தள்ளிப்போகும்போதெல்லாம் துவண்டுபோன நிர்பயாவின் பெற்றோரும், தங்கள் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஒரு செய்தி நிறுவனத்துக்கு நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் அளித்துள்ள பேட்டியில்,

கடந்த 2012ஆம் ஆண்டு தங்கள் மகள் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டது முதல், அப்போது காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தி பேருதவி செய்ததை முதன்முறையாக நினைவுகூர்ந்துள்ளார்.

நிர்பாயாவுக்கு கொடுமை நிகழ்ந்தபோது, பலர் தங்களுக்கு உதவ முன் வந்ததாக தெரிவித்துள்ள அவர், ராகுல் காந்தியின் உதவியை மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான ரீதியில் ராகுல் காந்தி உதவியதோடு, வழக்கு முடியும் வரை பொருளாதார உதவி செய்ததாகவும் பத்ரிநாத் சிங் கூறியுள்ளார். 

நிர்பயாவின் இழப்பால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்ததோடு, அவரை பைலட் ஆக்கியதும் இராகுல்காந்தி தான் என்ற தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

அரசியல் எவ்வாறாக இருந்தாலும், இராகுல் காந்தி எங்களுக்கு ஆண் தேவதை என வர்ணித்துள்ள பத்ரிநாத் சிங், இவ்வளவு உதவிகளையும் செய்துவிட்டு, அதனை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்ட தகவலை, தமது பேட்டியின் போது முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிற வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிர்பயா குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோதனையில், மனிதாபிமான உணர்வோடு இராகுல்காந்தி விளம்பரம் இல்லாமல் செய்த உதவியை 7 ஆண்டுகள் கழித்து நிர்பயாவின் பெற்றோர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக அரசியல்வாதிகள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் பலமடங்கு கூடுதலான விளம்பரத்தை தேடி ஆதாயம் தேடுவது இயல்பு. ஆனால், இராகுல்காந்தி அவர்கள் எவ்வித விளம்பரமும் இன்றி, பாதிக்கப்பட்ட நிர்பயா குடும்பத்தினருக்கு உதவிசெய்துள்ளார்” என்று அழகிரி தெரிவித்துள்ளார்.