டெல்லியில் காஷ்மீருக்குப் போராடுகிறார் ஸ்டாலின்?

தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டம் டெல்லியில் நடத்த இருப்பதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதோ அவரது அறிக்கை.


அமைதி திரும்புகிறது என்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5.8.2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து- தொலை தொடர்புகளை துண்டித்து - காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை செயல்படுத்திக் கொண்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீரத்து சிங்கம் என்று அனைவராலும் அழைக்கப்படும் சேக் அப்துல்லா அவர்களின் மகன் திரு பரூக் அப்துல்லா அவர்கள் தனது 83-ஆவது வயதிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர். அதே போல் அவரது மகன் திரு உமர் அப்துல்லா, இன்னொரு முன்னாள் முதல்வர் திருமதி மெகபூபா மப்டி ஆகியோர் ஜனநாயகத்தின் குரலாக நின்று காஷ்மீர் மக்களுக்கு அரும்பணியாற்றியவர்கள்.

இவர்கள் அனைவரையும் இன்றோடு  14 நாட்களுக்கும் மேலாக கைது செய்து- வீட்டுக் காவலில் வைத்து- அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் பறித்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமலேயே காஷ்மீர் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, காஷ்மீர் மாநில சட்டமன்றம் இல்லாமலேயே நாடாளுமன்றத்தில் மசோதாக்களை கொண்டு வந்து நிறைவேற்றி - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து வைத்திருக்கிறது. 1947ல் இருந்து இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த காஷ்மீரை- இன்றைக்கு அடக்குமுறைகள், ஊரடங்கு உத்தரவுகள் மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது. காஷ்மீரில் என்ன நடக்கிறது? அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களின் கதி என்ன ஆனது? சகஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இன்னும் ஏன் காஷ்மீர் மாநிலம் ஸ்தம்பித்து நிற்பது ஏன் என்பது பற்றியெல்லாம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களோ, உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களோ கவலைப்படுவதாக தெரியவில்லை.

காஷ்மீரில் இருட்டடிப்புச் செய்து விட்டு- அங்கே ஜனநாயக படுகொலையை செய்து விட்டு - அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை அமல்படுத்தி விட்டு- நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி ‘காஷ்மீரில் சாதித்து விட்டோம்’ என்று கூறி வருவது ஒரு வகை அரசியலே தவிர- நாட்டின் மீதுள்ள பற்றாகவோ, பாசமாகவோ தெரியவில்லை.

பொருளாதாரத்தில் திணறி- தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்ற அவல நிலைமை பற்றி கவலைப்படாமல்- அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கண்டு கொள்லாமல் ஒரு மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவரை கைது செய்வது, அங்கு மக்களைச் சந்திக்க விரும்பும் அகில இந்திய கட்சிகளின் அரசியல் தலைவர்களை தடுத்து நிறுத்துவது என்று அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.

ஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றத் துடித்து- இப்போது காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது பா.ஜ.க. அரசு என்பதைப் பார்க்கும் போது- இவர்களுக்கு ஜனநாயகத்திலும் நம்பிக்கையில்லை. இந்தியாவை கட்டிக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திலும் நம்பிக்கையில்லை என்பதையே எடுத்துரைக்கிறது.

தேச தந்தை மகாத்மாக காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்ற அரும்பெரும் தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகளை மூலம் பிடுங்கிக் கொள்ள மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முயற்சி செய்வதை தடுத்தே தீர வேண்டியது ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. 

ஆகவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்து தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகின்ற 22.8.2019 அன்று காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில்  ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ‘கண்டன ஆர்ப்பாட்டம்’ நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

யாரு தலைமையிலேன்னு சொல்லுங்க, அதுக்கு கனிமொழிக்கும் டி.ஆர்.பாலுக்கும் சண்டை நடக்கப்போகுது!