கோழிக்கோடு: பேனாவால் குத்தி விளையாடியதில் எல்கேஜி மாணவனுக்கு பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்கேஜி மாணவன் கண்ணில் பேனா குத்து! சக மாணவனால் வகுப்பறையில் அரங்கேறிய பயங்கரம்! பார்வையே பறிபோன விபரீதம்!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏகேடிஎம் லோயர் பிரைமரி ஸ்கூல் செயல்பட்டு வருகிறது. இங்கு, எல்கேஜி படிக்கும் மாணவர்கள் 2 பேர் வகுப்பறையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, ஒரு மாணவன், மற்றொரு மாணவனின் கண்ணில் பேனாவால் குத்தியுள்ளான். இதில், அந்த மாணவன் கடும் வலியால் வேதனையுற்று, அலற, ஆசிரியர்கள் எதுவும் கண்டுகொள்ளாமல் அசட்டையாக இருந்துள்ளனர்.
பிறகு, மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வரும்வரை முதலுதவி கூட செய்யாமல் காத்திருந்துள்ளனர். மாணவனின் பெற்றோர் சென்று, அவனை மீட்டு, அருகாமையில் உள்ள குரோம்டிரஸ்ட் கண் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனதாகக் கண்டறிந்தனர். மாணவனுக்கு பார்வை திரும்ப வாய்ப்பில்லை எனக் கூறும் மருத்துவர்கள், கண்ணில் வேறு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மருந்து, மாத்திரைகளை பரிந்துரை செய்துள்ளனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்திய பள்ளி நிர்வாகத்திற்கு, மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவத்தை கண்டும் காணாமல் இருந்த ஆசிரியர் விஜியை, பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.