காடுவெட்டி குரு பெயரில் ரூ.300 கோடி சொத்து! அபகரிக்க ராமதாஸ் முயற்சி! மகள் பரபரப்பு பேட்டி!

காடுவெட்டி குரு பெயரில் உள்ள ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க ராமதாஸ் முயற்சி செய்வதாக குருவின் மகள் விருதாம்பிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.


தனது அத்தை மகன் மனோஜ் கிரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட விருதாம்பிகை கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:- நான் சிறிய வயது முதலே மனோஜை காதலிக்கிறேன். எங்கள் காதல் எனது தந்தை குருவுக்கு தெரியும் மனோஜை எனக்கு திருமணம் செய்து வைக்க என் தந்தை முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் தான் என் தந்தை திடீரென காலமாகிவிட்டார்.

   என் தந்தை மறைந்த பிறகு எனக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க அய்யா முயற்சி செய்தார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் மனோஜை அதனால் தான் திடீரென திருமணம் செய்து கொண்டேன். மனோஜை திருமணம் செய்த பிறகு எங்கள் குடும்பத்துக்கு மிரட்டல் வருகிறது. என் அப்பா பெயரில் 300 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்.



   அந்த சொத்துகள் எங்கள் குடும்பத்துக்கு வந்துவிடக்கூடாது என்று அய்யா  நினைக்கிறார். அதனால் தான் என்னை அவர் விரும்பும் நபருக்கு கல்யாணம் செய்து வைக்க அய்யா முயற்சிக்கிறார். நான் மனோஜை திருமணம் செய்து கொண்டேன். இனி எங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது, தொடர்ந்து மிரட்டல் வருகிறது. போலீஸ் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை கூறியுள்ளார்.