அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்தப் பதவி யாருக்கு என்று பெரிய போட்டியே நடக்கிறது.
தி.மு.க.வை உடைக்கிறாரா ஆ.ராசா..? பொதுச்செயலாளர் பஞ்சாயத்து.

துரை முருகனுக்குத்தான் அந்தப் பதவி என்று சொல்லப்படும் நிலையில், ஆ.ராசா கடுமையாக முயற்சி செய்கிறார். அவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து வெளியேறிவிடுவார் என்றும் செய்திகள் படபடக்கின்றன.
இந்த நிலையில் அப்படியெல்லாம் இல்லை என்று தி.மு.க.வினரே சமாளிபிகேஷன் செய்து வருகின்றனர். இதுகுறித்து தி.மு.க.வினர் செய்திருக்கும் பதிவு இது. ஆ.ராசா. அவர்களை 2ஜி பிரச்சனையில் இந்தியாவில் இருக்கிற அத்தனை பத்திரிக்கைகளும், ஊடகங்களும் அவரை தேச துரோகியாக ஊழல் வாதியாக சித்தரித்தனர்.
மேலும் திமுகவில் இருந்து அவரை நீக்க வேண்டும் 2ஜி வழக்கில் அவர் நிரபராதி என்று நிரூபித்த பின்பு மீண்டும் கட்சியில் சேர்க்கலாம் என்று எழுதினார்கள். பேசினார்கள். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அப்படி எழுதியவர்களைப் பற்றி கவலைப்படாமல் ஆ.இராசா அவர்களை இயக்கத்திலிருந்து நீக்காமல். "அறம் வெல்லும்" என்ற வாசகத்தை எழுதி அதை இராசாவின் கையிலே கொடுத்தார்.
இன்றைக்கு தி.மு.க.வினுடைய பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் மறைந்த பிறகு அந்தப் பொறுப்புக்கு யாரைப் போடுவது என்பது திமுகவின் உட்கட்சி பிரச்சனை.. யாரை எந்த பொறுப்புக்கு போடலாம் என்பதை கழகத்தினுடைய மாநில நிர்வாகிகள்.. உயர்நிலை செயல் திட்டக்குழு.. மாவட்ட செயலாளர்கள். மற்றுமுள்ள கழக முன்னணியினர் முடிவெடுப்பார்கள்.
ஆ. ராசா. அவர்களை இப்போது தகுதி வாய்ந்தவராக தூக்கிப் பிடிக்கும் அத்தனை பேரும் அன்றைக்கு ஆ ராசா என்ற ஒடுக்கப்பட்ட தோழருக்கு 2ஜி வழக்கில் களங்கம் ஏற்பட்டபோது ஆ ராசா அவர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் ஆ ராசாவின் மீது சுமத்தப்பட்ட பழியை பயன்படுத்தி திமுகவை அழித்துவிட துடித்தார்கள். அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட அதே கும்பல் தான் இன்றைக்கு ஆ ராசா அவர்களுக்கு திமுகவில் பதவி வழங்க வேண்டும் என்று பாசத்துடன் பசப்புகிறார்கள்.
ஆ.ராசா அவர்களுக்கு எந்த நேரத்தில் எந்த பொறுப்பை வழங்க வேண்டும் என்பது எங்கள் தளபதியாருக்கு தெரியும். திராவிட முன்னேற்ற கழகம் தன்னை எவ்விதத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் கைவிடாது என்பது அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கும் தெரியும்.
திமுகவை தீவிர பகையாளி ஆக நினைக்கின்ற பலபேர் இன்றைக்கு ஆ.ராசா அவர்களின் ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஒருவேளை இந்த பொறுப்பு ஆ ராசா அவர்களுக்கு வழங்கப்படாமல் போனால் அதை வைத்து ஒரு மலிவு பிரச்சாரத்தை நடத்தி திமுகவை அதன்மூலம் பலவீனப்படுத்தி விடலாம் என்ற பகல் கனவில் ஆ ராசா என்னும் ஆயுதத்தை இப்பொழுது கையில் எடுத்திருக்கிறார்கள்.
பொறுப்பைப் பற்றி அண்ணன் ஆ.ராசா அவர்களே கவலைப்படாத போது, பொறுப்பற்ற சில பிறவிகள் அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். இதுதான் எங்கள் கேள்வி.
ஆ ராசா அவர்கள் சிறைப்பட்ட போது அது பொய் வழக்கு என்று வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய வனோ, அல்லது ஆ. ராசா அவர்கள் நிரபராதி என்று கட்டுரைகள் எழுதியவனோ, கவலைப்பட்டு பேசினால் அவர்களுக்கு பதில் அளிக்கலாம். உள்ளுக்குள் திமுக எதிர்ப்பை வைத்துக்கொண்டு, உதட்டளவில் ஆ ராசா அவர்களை உச்சரிக்கும் ஊதாரி களின் சலசலப்பு பேச்சுக்கும் எழுத்துக்கும் திமுக கலங்காது.! கவலைப்படாது.! எங்கள் சமூகநீதிப் பயணம் இயக்கத்தில் இருக்கும் ஆ.இராசா அவர்களை போன்ற ஆயிரக்கணக்கான வீரர்களோடு தொடர்ந்து நடக்கும் என்கிறது அந்தப் பதிவு.