எடப்பாடி பழனிசாமி உண்மையான விவசாயிதானா..? கபடவேடத்தை நிறுத்தச் சொல்லும் தி.மு.க. நேரு.

தான் உண்டு என்னுடைய திருச்சி உண்டு என்று அமைதியாக இருந்த நேருவை சென்னைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஒழுங்காக ஒரு கடிதம்கூட எழுதத் தெரியாத நேருவின் பெயரால் மெகா அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஊழல்களை, லஞ்ச லாவண்யத்தை, கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காக 'நானும் ஒரு விவசாயி' என்று தினமும் புலம்பி வருகிறார். பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு நடிக்கிறார். தமிழ்நாட்டு விவசாயத்தைச் சிதைக்கும் ஏராளமான திட்டங்களுக்கு பச்சைக் கொடி காட்டி வரவேற்பு கொடுத்து வந்த பழனிச்சாமி,

பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு தன்னை விவசாயியாக காட்டிக் கொள்வது பச்சைத் துரோகம் என்று மதுரையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவரும் - எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.

 விவசாயி என்றால் நகத்தில் மண் இருக்க வேண்டும்' என்று பேரறிஞர் அண்ணா சொன்னதைக் குறிப்பிட்டார். உடனே பழனிசாமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. சேலத்தில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியவர் ''மு.க.ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைப்படுத்திவிட்டார்'' என்று பேசி இருக்கிறார்.

கழகத் தலைவர் அவர்கள், விவசாயிகளைக் கொச்சைப்படுத்தி பேசவில்லை. நானும் விவசாயிதான் என்று எடப்பாடி சொல்லிக் கொள்வதன் மூலமாக விவசாயிகளை அவர் கொச்சைப்படுத்தக் கூடாது என்பது தான் கழகத் தலைவரின் குற்றச்சாட்டு. 

'இது மம்பட்டி பிடித்த கை, ஏரோட்டிய கை, சேற்றில் மிதித்த கால்' என்று 'நானும் ரவுடி தான்' பாணியில் சேலத்தில் பேசி இருக்கிறார் பழனிசாமி. நானும் விவசாயிதான் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அவரது ஆட்சி காலத்தில் விவசாயிகள் அடைந்த நன்மை என்ன? அவர் விவசாயிகளுக்காக என்ன செய்தார்?

ஹைட் ரோகார்பன் திட்டத்தில் செய்திருக்கும் துரோகம் போதாதா? ஏற்கனவே இருந்த திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் 'வேளாண் மண்டலம்' என்று சொல்வது விவசாயிகளை ஏய்க்கும் மாய்மாலம். ஏற்கனவே இருக்கும் திட்டங்களை தொல்லைகள் இல்லாமல் நிறைவேற்றுவதற்காக இப்படி ஒரு பசப்புக் காரியத்தை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்துள்ளது. அதனால் தான், 'நாளை முதல் மதுவிலக்கு அமலாகிறது,

ஆனால் இப்போது இருக்கும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்று சொல்வது எத்தனைய அயோக்கியத்தனமோ அத்தகைய அயோக்கியத்தனம் இது' என்று மதுரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் தளபதி அவர்கள் குற்றம் சாட்டினார். யோக்கியராக இருந்தால் எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் சொல்லி இருக்க வேண்டும்!

அவரது கால் கழனிகளில் உள்ள சேற்றில் படவில்லை. ஊழல் சேற்றில் மூழ்கி கிடக்கிறது. அதுவும் எடுக்க முடியாத அளவுக்கு புதையுண்டு போய்க்கொண்டு இருக்கிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக 'நானும் விவசாயி' என்று வேஷம் போட்டுக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்.

தன்னை இவர் விவசாயி என்று சொல்லிக் கொள்வதன் மூலமாக உண்மையான விவசாயிகள் தலைகவிழ்கிறார்கள். ஒரு ஊழல்வாதி, தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்வதை தமிழ்நாட்டு விவசாயிகள் விரும்பவில்லை. ஏற்கனவே விவசாயிகளின் வாழ்க்கை நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறது.

அதில் இவரது பேச்சு மட்டுமல்ல, விவசாயி வேஷமும்ம் அறுவறுப்பாக இருக்கிறது. இந்த கபட வேடங்களை விட்டுவிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நேரு.