நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குடும்பதகராறு காரணமாக கணவனை கல்லால் அடித்து கொன்ற மனைவி மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதல் கணவனை கல்லால் அடித்தே கொலை செய்த மனைவி! கல்யாணம் ஆன ஐந்தே மாதத்தில் விபரீதம்!

நாகை மாவட்டம், தலைச்சங்கோட்டையை சேர்ந்த சதீஸ்குமார் மற்றும் அப்பராசபுத்தூர் சேர்ந்த கலைமதி. இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்றது. பல வருடங்களாக காதலித்தவர்கள் 5 மாதங்களுக்கு முன்னர் தான் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இரு வீட்டார் சம்மதத்துடன் கலைமதி - சதீஷ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. காதல் திருமணம் செய்த நிலையில் திருமணம் ஆன சில நாட்களிலேயே சில கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் வீட்டுக்கு தனது தந்தையுடன் சென்றுள்ளார் கலைமதி. அப்போது வீட்டிற்குள் கலைமதியை சேர்த்துக் கொள்வது குறித்து அவரது கணவர் சதீஷ் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மனைவி கலைமதி கணவரை கல்லால் தாக்கியுள்ளார்.
அப்போது உடன் இருந்த கலைமதியின் தந்தையும் மாமனார் நாகராஜூம் சதீஸை கத்தியால் குத்தியுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு தாக்குதல்களை எதிர்கொண்டு நிலை குலைந்த சதீஸை அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து மருத்துவ மனைக்கு அழைத்து சென்றபோது வழியில் சதீஸ் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சதீஸின் மனைவி மற்றும் மாமனார் நாகராஜ் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.