சபாஷ்.. பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளோடு இணைக்கப்பட்ட ஊக்க கடிதம்..

இங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்கு இணைக்கப்பட்ட கடிதத்தில் எப்படிப்பட்ட ஊக்கம் இருக்கிறது என்பதை தமிழில் எடுத்து பதிவிட்டுள்ளார் பூ.கொ.சரவணன்


இந்தக் கடிதத்தோடு உங்களின் தேர்வு முடிவுகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்தச் சிக்கலான தேர்வு வாரத்தில் நீங்கள் காட்டிய அளவில்லாத அர்ப்பணிப்பு, விடாமுயற்சியைக் கண்டு நாங்கள் பெரிதும் பெருமைப்படுகிறோம். 

ஆனால், இந்தத் தேர்வுகள் உங்களைத் தனித்தவராகவும், சிறந்தவராகவும் ஆக்கும் பண்புகளை முழுமையாக எடை போடாது என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். இந்த வினாத்தாள்களைத் தயாரிப்பவர்கள், இவற்றைத் திருத்துபவர்கள் ஆகிய ஒவ்வொருவருக்கும் உங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாகத் தெரியாது. உங்களை உங்கள் ஆசிரியரோ, பெற்றோரோ, நானோ அறிய முயல்கிற மாதிரியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ அற்புதமாக ஒரு இசைக்கருவியை மீட்டுவாய் என்றோ, பிரமிக்க வைக்கிற வகையில் ஓவியம் வரைவாய் என்றோ, அழகாக நடனம் ஆடுவாய் என்றோ அவர்களுக்குத் தெரியாது. 

உன் நண்பர்களுக்கு நீ எவ்வளவு முக்கியமானவர் என்றோ,உன்னுடைய ஒரு புன்னகை அவர்களின் ஒரு நாளை எவ்வளவு சிறப்பானதாக ஆக்கிவிடும் என்றோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ கவிதையோ,பாடலோ எழுதுவாய் என்றோ, விளையாட்டுகளில் பங்கு பெறுகிறாய் என்றோ, சிலசமயங்களில் பள்ளி முடிந்த பின்னர் உன்னுடைய குட்டித்தம்பி அல்லது தங்கையைக் கவனித்துக்கொள்கிறாய் என்றோ அவர்களுக்குத் தெரியாது. நீ கச்சிதமான ஒரு இடத்துக்குப் பயணம் போய் வந்திருக்கிறாய் என்றோ, ஒரு சிறந்த கதையை அசந்து போகிற வகையில் உனக்குச் சொல்லத்தெரியும் என்றோ, முக்கியத்துவம் வாய்ந்த நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களோடு நேரம் செலவிட்டாய் என்றோ அவர்களுக்குத் தெரியாது. நீ நம்பிக்கைக்குரியவன், கருணையானவன், யோசிக்கக்கூடியவன் என்பதோ, நீ ஒவ்வொரு நாளும் உன்னுடைய ஆகச்சிறந்த பங்களிப்பை தர முயல்கிறாய் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. இந்த முடிவுகள் எதோ சிலவற்றைச் சொல்கின்றன, ஆனால், அவை உன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லவில்லை. 

இந்த முடிவுகளைக் கொண்டாடுங்கள்,இவற்றைப் பற்றிப் பெருமிதப்படுங்கள். அதே சமயம் நீ சாமர்த்தியசாலியாக இருப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சபாஷ்.