நிவாரணம் குடுங்க ஆனா, எங்ககிட்டே குடுங்க…! சொன்னதை சொல்லும் எடப்பாடி பழனிசாமி.

நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடுமையான எதிர்ப்பு வருவதைக் கண்டதும், அந்த அறிக்கையை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்தி இருக்கிறது தமிழக அரசு.


அதாவது நிவாரணம் கொடுப்பதற்கு எந்த தடையும் இல்லை, வழிமுறைகளில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு விளக்கம் சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது.

அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில், பொது மக்கள் கூடுவதற்கு எந்த ஒரு தடை உத்தரவும் கிடையாது.

ஆனால் தற்போது, இந்த பேரிடர், கொடிய வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம். இந்தத் தொற்று யாரிடம் உள்ளது, அது எப்போது, யாருக்கு யார் மூலம் பரவும் என தெரியாத நிலையில், நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் தான், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இயல்பான நகர்வுகளுக்கும், தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும், நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், அதே சமயம் நோய்த் தொற்று பரவுவதை தவிர்க்கவும், முறையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். எனவே, புயல், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவது போல தற்போது உதவி செய்ய ஆரம்பித்து விட்டால், நோய்த் தொற்று தான் அதிகமாகும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.  

அதனால் தான் எந்த ஒரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும், அதை முறையாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடமோ, மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமோ, மண்டல அலுவலர்களிடமோ, நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி ஆணையரிடமோ, பேரூராட்சியாக இருந்தால், செயல் அலுவலரிடமோ, ஊராட்சி ஒன்றியமாக இருந்தால், வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம்.

மேலும், இத்தகைய உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம். இதை விநியோகப்பதற்கென அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையிலும், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு, அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இப்பணியில் தன்னார்வலர்களும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம். அதற்கென சம்பந்தப்பட்ட அலுவலரின் தொலைபேசி மற்றும் கைபேசி எண்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்களும், மற்ற தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஏற்கனவே முதியோர், மாற்றுத் திறனாளிகள், நம் மாநில மற்றும் இதர மாநில தொழிலாளர்கள், ஆதரவற்றோர் போன்றோருக்கு நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கிட, 2,500க்கு மேற்பட்ட நிறுவனங்களும், 58 ஆயிரம் தன்னார்வலர்களும் தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்து கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சமூக இடைவெளி மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர். 

எனவே, அரசின் நோக்கம் உதவி செய்வதைத் தடுப்பது அல்ல. தற்போதைய நோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நிவாரண உதவிகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு.

இதற்கு ஓரிரு நியாய விலைக் கடைகளில் கூடும் கூட்டத்தை காரணம் காட்டி, நியாயப்படுத்தி பேசுவதும் சரியல்ல. நியாய விலைக் கடைகள், பிற அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் இதர கடைகளில் கூடும் கூட்டத்திலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ள இந்த அரசு, அதை தீவிரமாக கண்காணித்தும் வருகிறது.  

ஆனால் உண்மைக்கு மாறாக ஸ்டாலின் வைகோ, கே.எஸ்.அழகிரி ஆகிய ன்ற தலைவர்களும், பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு அரசு தடை விதித்து விட்டது போல் உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் அரசு, எந்தவிதமான அரசியலும் செய்யவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.