சொல்லி அடித்த ஸ்மிருதி! அமேதியில் ராகுல் தோற்றது எப்படி தெரியுமா?

ராகுல்காந்தி திடீரென வயநாட்டில் போட்டியிட முடிவு செய்தபோது, பலருடைய புருவங்களும் உயர்ந்தன.


 ஏன், அமேதியில் நிச்சயம் ஜெயிக்கப் போகிறார், பிறகு எதற்காக இன்னொரு தொகுதி என்று கேட்டனர். அவர் வயநாட்டை தேர்வு செய்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று உ.பி.வாசிகள் கொந்தளிக்கிறார்கள்.  அதேபோன்று ஸ்மிருதி ராணியின் திட்டமிட்ட உழைப்பும் ராகுலை குப்புறத் தள்ளியிருக்கிறது. ஆனால், இதில் இருந்து ராகுல் படிக்க வேண்டிய பாடம் நிறையவே இருக்கிறது.

ஏனெறால் அமேதி எப்போதும் காங்கிரஸ் தொகுதி. கடந்த 1980ம் ஆண்டு இந்திரா காந்தியின் செல்லப் புதல்வன் சஞ்சய் காந்தி, இங்கே இருந்துதான் தேர்வு செய்யப்பட்டார். இவரது மறைவுக்கு பின்னர் 1981ல் ராஜிவ் காந்தி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1984, 1989, 1991 ல் தொடர்ந்து ராஜிவ் வெற்றி பெற்று எம்.பியானார்.

1996ல் ராகுல் குடும்ப நண்பர் கேப்டன் சதீஷ்சர்மா இங்கே எம்பி,.யானார். 1998ல் ஒரு முறை பா.ஜ,. வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து 2004, 2009, 2014ல் ராகுலே எம்.பி.,யானார். ஆனால், இந்த முறை ஸ்மிருதி ராணி வெற்றி பெற்றுள்ளார்.  ஸ்மிருதி கடந்த முறை தோல்வி பெற்றாலும், அவர் இந்த தொகுதியில் ஒரு அக்கறையோடு அடிக்கடி சென்று வந்தார். அங்குள்ள மக்களுடன் நெருங்கி பழகினார்.

மேலும் இங்குள்ள பா.ஜ., நிர்வாகிகளுடன் சுமுகமாக பழகி மக்கள் தேவைகளை செய்து கொடுத்தார். மேலும் இங்குள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகள் தேவைகளை அறிந்து உதவி செய்து வந்தார். ஸ்காலர்ஷிப், வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவ உதவிகள் என பல விதங்களில் அவரது உதவி விரிந்தது. இது இளம் வாக்காளர்களை கவர்ந்தது.

மேலும் டில்லிக்கு சென்றால் ஸ்மிருதியை எளிதாக அணுக முடியும் என்ற நிலையையும் ஏற்படுத்தினார். இது போன்ற விஷயங்கள் ஸ்மிருதியின் செல்வாக்கை உயர்த்தியது. சமீபத்தில் தேர்தலையொட்டி அமேதியில் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டபோது அவரே தண்ணீர் எடுத்து சென்று அணைப்பதும். அடி குழாயில் தண்ணீர் அடித்து கொடுத்த வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி ஸ்மிருதியின் மதிப்பை மக்கள் மத்தியில் உயர்த்தியது. ஆனால் ராகுல் இந்த தொகுதி பக்கமே வருவதில்லை என்ற குறை இருந்து வந்தது. 

ஏறக்குறைய 39 ஆண்டுகளாக காங்கிரசின் கைவசம் இருந்த அமேதி தற்போது பா.ஜ., வசம் வந்து விட்டது. இங்குள்ள மக்களை நம்பாமல், வயநாட்டில் போட்டியிடப் போனது, இந்த மக்களை அவமானத்துக்கு உள்ளாக்கிவிட்டது. அதனாலே தோல்வியை பரிசாக கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆம், நம்பிக்கைதான் முக்கியம் என்பது ராகுல் படிக்கவேண்டிய முக்கிய பாடம்.