கொரோனா வைரஸ் எத்தனை மோசமானது தெரியுமா? இதோ மருத்துவர் சொல்றதைக் கேட்டு நடந்துக்கோங்க.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவிடாமல் இருப்பதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனை கிண்டல், கேலி செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் நமக்கும், பிறருக்கும் நன்மை பயக்கும்.


அந்த வகையில் கொரோனா வைரஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கிறார் சி.எம்.சி. மருத்துவர் ஜாக்வின் சாம் பால். படித்துப் பார்த்து, தெளிவு பெறுங்கள். 

1. கரோனா வைரஸ் எந்தளவிற்கு உயிர்கொல்லி நோய்?

கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 3% பேர் இறக்கிறார்கள். எனினும், கரோனாவால் பாதிக்கப்படும் முதியோர்களில் இந்த மரண விகிதம் 15% வரை உள்ளது.

2.எவ்வளவு வேகமாக கரோனா வைரஸ் பரவும்?

சராசரியாக கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூன்று பேருக்கு நோய்த்தொற்றை பரப்புகிறார். எனினும், கரோனா வைரஸ் அதிவிரைவாக பல்கிப் பெருகுவதால், கரோனா வைரஸ் நம்மை தொற்றியிருக்கிறது என்று தெரிவதற்குள் பலருக்கும் நோயை பரப்பி இருப்போம்.

3. மேலே சொன்னதை எல்லாம் பார்த்தால், கரோனா ஒன்றும் அத்தனை மோசமான வைரஸ் போல தெரியவில்லையே?

நம் நாட்டில் குறிப்பிட்ட அளவு மருத்துவ வசதிகளும், சுகாதார வளங்களும் மட்டுமே உள்ளன. இதனை நம்பியே பல கோடி மக்கள் இருக்கிறார்கள். நம்முடைய மருத்துவமனைகளை நோயாளிகளால் நிரப்பிக் கொண்டிருந்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் கூடிவிடும்.

4. கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் என்னென்ன?

*காய்ச்சல்

*இருமல்/ஜலதோஷம்

*மூச்சு விட திணறுதல்

*அசதி

*அரிதாக வயிற்றுப்போக்கு

5. மேற்சொன்ன அறிகுறிகள் உள்ள அனைவரும் மருத்துவனைக்கு ஓட வேண்டுமா?

இல்லை. கூட்டம், கூட்டமாக மருத்துவமனையில் போய் நின்றால் எளிதாக நோய்த் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ள முதியோர், ஏழைகள், நோய் எதிர்ப்பு சக்தியற்றோர் முதலியோருக்கு வேகமாக கரோனா வைரஸ் பரவிவிடும்.

6. பின் யாரெல்லாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?

கீழ்க்கண்டவர்கள் மருத்துவமனைக்கு செல்லலாம்:

*மூச்சு விட முடியாதவர்கள்

*நெஞ்சு வலி உள்ளவர்கள்

*கடும் சுரம் அடிப்பவர்கள்

*அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்

*நெடுங்காலமாக இதய/சிறுநீரக/நுரையீரல்/கல்லீரல் நோயால் அவதிப்படுபவர்கள்

7. கரோனாவில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

*கைகளை நன்றாக கழுவ வேண்டும். பிற நபர்களுக்கு அருகே போவதற்கு முன்போ, அவர்களை தொட நேர்ந்ததற்கு பின்போ கண்டிப்பாக முறையாக கைகளை கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை தேய்த்து கழுவவும்.

* ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தபட்சம் மூன்றடி இடைவெளி இருக்கட்டும்.

* தும்மலோ, இருமலோ வந்தால் உங்கள் தோள்பட்டை அல்லது முழங்கையில் இருமுங்கள். இது உங்களுக்கு வசதியாக இல்லையென்றால் டிஷு பேப்பரை பயன்படுத்தவும்.

அதனால் கொரோனா குறித்து யாரும் பீதியடையத் தேவையில்லை, ஆனால் நிச்சயம் மிக மிக கவனமாக இருந்தே ஆகவேண்டும்.