குடும்ப அரசியலுக்கு நோ... வாக்காளர்கள் மனநிலையால் டென்ஷனில் உதயசூரியன், குஷியில் இரட்டை இலை.

தமிழக தேர்தல் களத்தில் முக்கிய பேசுபொருள்களில் ஒன்றாக குடும்ப அரசியல் உள்ளது. படித்தவர், பாமரர் என்கிற வித்தியாசமின்றி குடும்ப அரசியலை எல்லோருமே வெறுக்கின்றனர். குடும்ப அரசியலுக்கு அடையாளமாக இருக்கும் திமுகமீது வாக்காளர்களுக்கு கடும் கோபம் உள்ளது. இது தொடர்பாக வாக்காளர்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு;


‘’ அண்ணா காலம் வரை திமுக மக்கள் கட்சியாக இருந்தது. அவரது மறைவுக்குப் பிறகு என்றைக்கு கருணாநிதி தலைவரானாரோ அன்று முதல் திமுக வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கும் குடும்ப கட்சியாக மாறிவிட்டது. முரசொலி மாறன், மு,க. முத்து, மு.க அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி என மருமகன், மகள், மகன்களில் தொடங்கி இப்போது பேரன், எதிர்காலத்தில் கொள்ளுபேரன் வரை திமுகவில் கருணாநிதி குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வெளியில் தெரிந்த இவர்கள் தவிர செல்வி, செல்வம், தமிழரசு, துர்கா ஸ்டாலின் என மறைமுக ஆதிக்கம் செலுத்தும் கூட்டமும் உள்ளது. ஆட்சியில் இல்லாத நேரங்களில் கட்சி விவகாரங்களில் இவர்கள் வைத்ததுதான் சட்டம். ஆட்சி கைவசம் இருந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்.

ஆளுக்கொரு திசையில் அதிகாரத்தை வளைப்பதால் நிர்வாகம் சீர்குலையும். திமுக ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய அதிகாரிகளைக் கேட்டால் கதைகதையாக சொல்வார்கள். இந்த இழிநிலையை கருணாநிதியும் சரி, ஸ்டாலினும் சரி கொஞ்சமும் தட்டிக் கேட்டதில்லை. அதேசமயம் ஆளும் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி தொடங்கி பெரும்பாலான அமைச்சர்கள்,

மூத்த நிர்வாகிகள் வரை மிகப் பெரும்பாலானோர் வாரிசு அரசியலை தொடரவில்லை என்பதுதான் நிஜம். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் கட்சித் தலைமை இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என்கிற எதார்த்த நிலையை சாதாரண மக்கள் கூட புரிந்து வைத்துள்ளனர்.

மக்களின் இந்த மனநிலை தேர்தலில் எதிரொலிக்காதா என்ன!