மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா? தீயாய் பரவும் தகவலும் அதன் பரபர உண்மை பின்னணியும்..!

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அர்ச்சகர்கள் சங்கம் அறிவிப்பு.


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட பட்டர்கள் ஆலய பூஜைகளை செய்து வருகிறோம். இன்று (23/4/2020) நியூஸ் 18 தொலைக்காட்சியில் "வெளிநாடு சென்று வந்த பட்டருக்கு கொரோனா தொற்று உறுதி) என்று செய்தி ஒளிபரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான செய்தி.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாயார்(72 வயது) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான நீரிழிவு மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருக்கும் போது அவருக்கு காய்ச்சல் வந்ததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவிக்குப் பின்னர் ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முதலிலும், உள்ளது என்று இரண்டாவதாகவும் தகவல் தெரிவித்தனர்.

இதற்கு இடையில் ரேப்பிட் கிட் பரிசோதனை முடிவுகளில் குழப்பம் இருக்கிறது என்பதால் அதன்படி முடிவுகளை அறிவிப்பதை அரசு நிறுத்தி வைத்துள்ளது. தற்போது எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகள் தெரிய இன்னும் ஒருநாள் ஆகும் என்று அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில்... அந்த குடும்பத்தினரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்து தனிமைப்படுத்தி உள்ளனர். இதை தொடர்ந்து அவரது வீட்டில் வேலை செய்தவர், அக்கம் பக்கத்தவர்களையும், அவரது மகன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரிவதால்... கோவில் பட்டர்கள், பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர் என அனைவருக்கும் பரிசோதனை செய்ய மாநகராட்சி/மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு...

தற்போது பரிசோதனைகள் நடந்து வருகிறது. இதுவரையில் காவல்துறையினருக்கு டெஸ்ட் நடந்து வருகிறது.  இன்னும் பட்டர்கள் யாருக்கும் டெஸ்ட் எடுக்கவில்லை. இந்நிலையில் மேற்படி நியூஸ் 18 போன்ற ஊடகங்கள் "வெளிநாடு சென்று வந்த பட்டருக்கு தொற்று உறுதி" என்று பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் குறிப்பிடும் பட்டர் வெளிநாடு எதற்கும் செல்லவில்லை. ஏற்கனவே வெளிநாட்டுக்கு சென்று வந்ததால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்த பட்டர்கள் சிலருக்கும் 24-30 நாட்கள் அரசு கண்காணிப்பு முடிந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு விட்டது..  என்ற விவரத்தையும் அறியத் தருகிறோம்.

 நன்றி.

 இப்படிக்கு,

 இரா.சாமிநாதபட்டர்,