குமரி அமைதிநடையில் தடியடி - காங்கிரஸ் தலைவர் விளக்கம்!

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் நடைப்பயணம் மேற்கொண்ட காங்கிரசு கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ 90 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திரப் போராட்ட காலத்தில் 1930 மார்ச் 12 அன்று, மகாத்மா காந்தியடிகள் துவங்கிய உப்புச் சத்தியாகிரக அறவழிப் போராட்டமான ‘தண்டி யாத்திரை” யை நினைவு கூறும் வகையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் அஹிம்சை வழியில் பாத யாத்திரை நடத்துவதற்கு காவல்துறையிடம் உரிய அனுமதி கோரப்பட்டது.

இந்தப் பாத யாத்திரை கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள காமராஜர் சிலையிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக இரணியல் சந்திப்பு வரை செல்வதற்கான முறையான அனுமதியைக் காவல்துறையினரிடம் விண்ணப்பமாக அளித்திருந்தார்கள்.

அதன்படி, இன்று காலை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குளச்சல் காமராஜர் சிலையிலிருந்து மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியில், அமைதியான முறையில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பாதயாத்திரை செல்ல முயன்றுள்ளனர். ” என்று கூறியுள்ளார்.  

மேலும், ”அவர்களை, குளச்சல் காவல்நிலையம் அருகில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ஜனநாயத்திற்கு விரோதமாக, அவர்கள் மீது தடியடி நடத்தி காயப்படுத்தியதோடு, பொய்யான வழக்குகளை பதிவு செய்து கைது செய்துள்ளனர் இது மிகவும் கடுமையான கண்டணத்திற்குரியது. தடியடியினால் பாதிக்கப்பட்டு காயம் அடைந்துள்ள நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் குறைந்தபட்ச மருத்துவ சிகிச்சை பெறுவதற்குக் கூட அனுமதிக்காமல் சிறை பிடித்திருப்பது மனிதாபிமானமற்ற செயல். 

இது முழுக்க முழுக்க பி.ஜே.பி மற்றும் சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்களால் கொடுக்கப்பட்டுள்ள அழுத்தத்தின் காரணமாகவே உள்ளூர் காவல்துறையினர் இத்தகைய மனிதாபிமானமற்ற அராஜக செயலில் ஈடுபட்டுள்ளார்கள். இது மனித உரிமை மீறலாகும். மாவட்டக் காவல்துறை அதிகாரி இது குறித்து உரிய விசாரணை செய்து, இளைஞர் காங்கிரசார் மீது தடியடி நடத்தி, அவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்த சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது, துறைரீதியான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

காவல்துறையினரால் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ள இளைஞர் காங்கிரசாருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படவேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் திரும்பப் பெறுவதோடு, கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் மாவட்டக் காவல்துறை அதிகாரி உடனடியாக விடுவிக்கவேண்டும். 

பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டிய காவல்துறை, அரசியல் அழுத்தத்திற்கு பலியாகாமல் நேர்மையுடன் காவல்துறையின் கண்ணியத்தையும், அதன் மாண்புகளையும் பாதுகாக்கும்படி வேண்டுகிறேன்.

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல், காவல்துறை பொதுமக்களுடைய உண்மையான நண்பன், பாதுகாவலன் என்கிற எண்ணத்தை நிலை நிறுத்திடவும், காவல்துறை முற்றிலும் அரசியல் சார்பற்றது என்கிற நற்பெயரையும் பெற வேண்டுமென்று நான் பெரிதும் விரும்புகிறேன். ” என்றும் அழகிரி கூறியுள்ளார்.