இந்திய மக்களுக்கான பொதுப்பலன் வந்தாச்சு! பிரபல ஜோதிடர் கர்மலா பார்த்தாராமன் சொல்வதைக் கேளுங்க!

பிரதமர் மோடியின் கையில் இந்தியாவை பத்திரமாக ஒப்படைத்துவிட்டதும், இனிமே எல்லாத்தையும் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான் என்று ராஜேந்திர பாலாஜி ஸ்டைலில் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்.


ஓட்டுப் போட்ட மக்களுக்கு பிரபல பொருளாதார ஜோதிடர் கர்மலா பார்த்தாராமன், வரும் நான்கு வருடங்களுக்கு பலன் சொல்லியிருக்கிறார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கேளுங்கள். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இவர் எல்லா ராசிக்காரர்களுக்கும் ஒரே மாதிரியான பலன் சொல்லியிருக்கிறார் என்பதுதான். இதோ அவரது பலன்களைப் படியுங்கள்.

இந்தியா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருக்கிறது. நாம் அமெரிக்கா, சீனாவுடன் போட்டி போட வேண்டி இருப்பதால் கொஞ்ச காலம் இந்தியாவில் சொந்தத் தொழில் செய்வோர் பெரும் நட்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இதனால் வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளக்குறைப்பு முதல் வேலை இழப்பு போன்றவை நடப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் பாரதமாதாவின் வரும் காலத்துக்காக மக்கள் தாங்கிக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

கையில் பணம் இருக்கிறது என்றால் உடனே வங்கியில் போட்டுவிடுங்கள். அப்படி இல்லையென்றால் எல்லோரும் ஆளுக்கொரு கார் வாங்குங்கள். வீட்டில் பணம் வைத்திருந்தால், அவை எல்லாமே செல்லாது என்று அறிவிக்க வாய்ப்பு உண்டு, ஜாக்கிரதை.

ஆனால், எல்லோரும் வருமான வரி, ஜி.எஸ்.டி. மட்டும் கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் தேச துரோக குற்றச்சாட்டில் உள்ளே போகவேண்டிய சூழல் ஏற்படும். எந்தக் காலத்திலும் குடும்பத்தில் மனைவி, கணவன் சண்டை போட அரசு ஒப்புக்கொள்ளாது. அதனால், அமைதியாக வீட்டுக்குள் இருங்கள்.

நீங்கள் தொடர்ந்து சண்டை போடுவது தெரிந்தால், உங்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து, அதிகாரங்களைக் குறைத்துவிடுவோம். ஜாக்கிரதை. எங்கே எல்லோரும் உரக்கச் சொல்லுங்கள், பாரத மாதாவுக்கு ஜே!