அனைத்து கட்சிகளையும் முதலமைச்சர் அழைத்து பேசவேண்டும் - கே. பாலகிருஷ்ணன் இடித்துரைப்பு!

குடியுரிமைச் சட்டத்திருத்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சனநாயக அமைப்புகளையும் முதலமைச்சர் அழைத்துஇப் பேசவேண்டும் என்று மார்க்சிய கம்யூனிசக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.


இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ...........“ இன்று மாலை இசுலாமிய அமைப்புகளை தலைமை செயலாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக ஊடகங்களில் வந்திருக்கக் கூடிய செய்திகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, மதவேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடியவை. அசாம் அனுபவம் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் இதை இசுலாமிய மக்களின் பிரச்னையாக மட்டும் முன்வைத்து, இந்து முஸ்லீம் வேறுபாட்டை உருவாக்கி அரசியல் சுயலாபம் அடைவதே பாஜக அரசின் திட்டம்.

அதற்குத் துணை போவது போல, இந்தியர் அனைவரையும் பதட்டத்தில் ஆழ்த்துகிற அரசியல் பிரச்னையை இசுலாமிய சமூகத்தின் பிரச்னையாக மட்டும் தோற்றமளிக்க வைப்பதாகவே அதிமுக அரசின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை சட்டத்திருத்ததை எதிர்த்து இஸ்லாமிய மக்கள் அமைதியாக போராடி வரும்போது அவர்களை அச்சுறுத்தும் வகையிலும், சவால் விடும் வகையிலும் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற அமைப்புகள் வன்முறையைத் தூண்டும் வகையில் பகிரங்கமாக பேசி வருகின்றனர்.

இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. அதேசமயம் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் அழைத்து பேசுவது ஏன் எனக் கேள்வி எழுகிறது.

மத்திய அரசிடமிருந்து விளக்கம் வரவில்லை, எனவே என்.பி.ஆர். கணக்கெடுப்பை நிறுத்தி வைக்கிறோம் என்று ஒரு முறையும், அது இப்போது தொடங்காது என்று ஒரு முறையும் வருவாய்த்துறை அமைச்சர் மாறி மாறி கூறியுள்ளார். அப்படியானால் மத்திய அரசிடமிருந்து விளக்கம் கிடைத்த உடன், கணக்கெடுப்பு நடைபெறும் என்று பொருளா?

அதிமுக அரசு இதில் தன் நிலைபாட்டைக் குழப்பம் இல்லாமல் தெளிவுபடுத்த வேண்டும். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு ஒத்துழைக்க முடியாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் வலியுறுத்திய பின்னரும், அதிமுக அரசு இதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகிறது. 

இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றினால் தமிழகத்தில் போராட்டங்கள் முடிவுக்கு வருவதுடன் பொது அமைதி ஏற்படும் . இதை செய்வதற்கு மாறாக, இஸ்லாமிய அமைப்புகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவது அம்மக்களின் போராட்டங்களை தவிர்க்க வேண்டுமென வற்புறுத்துவது பிரச்சனையைத் தீர்க்க உதவாது.” என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.