உயிரிழந்த பிறகும் மாபெரும் உதவி! பிரபல நடிகை வாழ்வில் சில்க் செய்த மேஜிக்!

நடிகை சில்க் ஸ்மித்தாவால் தனது வாழ்க்கை மாறிவிட்டதாக பிரபல நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.


கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 3ந் தேதி வித்யா பாலன் நடித்த டர்ட்டி பிக்சர் திரைப்படம் வெளியானது. நடிகை சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் கமர்சியலாக மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் விமர்சகர்களாலும் அதிகம் பாராட்டப்பட்டது. சில்க்காக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது.



   2011 கால கட்டங்களில் இந்தி நடிகைகள் அனைவரும் சைஸ் ஜீரோ எனும் மெல்லிய தோற்றத்தில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் சில்க் வேடத்தில் நடிகை வித்யா பாலன் கொப்பும் குழையுமாக, மப்பும் மந்தாரமுமாக மிகவும் கவர்ச்சி காட்டி நடித்தார். படத்தில் வித்யா பாலன் நடித்துக் கொண்டிருந்த போதே அவரது தோற்றத்தை குறிப்பிட்டு படம் வெற்றி பெறாது, ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று கூறப்பட்டது.

   ஆனால் விமர்சனங்களை பொய்யாக்கி டர்ட்டி பிக்சர் பெறும் வெற்றி பெற்றது. வித்யா பாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆனார். இந்த நிலையில் படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் அதில் நடித்த வித்யா பாலன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் தான் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தனது வாழ்வை புரட்டிப்போட்டது நடிகை சில்க் ஸ்மிதா தான். சில்க் வேடத்தில் தான் நடித்த பிறகு தனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்ததாக வித்யா பாலன் கூறியுள்ளார்.



   டர்ட்டி பிக்சர் படத்திற்கு பிறகு தனது திரையுலக வாழ்வு மட்டும் இல்லாமல் தனிப்பட்ட வாழ்விலும் அதிக நல்ல விஷயங்கள் நடந்ததாகவும் வித்யா பாலன் தெரிவித்துள்ளார். சில்க் உயிருடன் இருக்கும் போது தான் பலருக்கும் உதவியுள்ளதாக கூறுவார்கள், ஆனால் மறைந்த பிறகும் கூட பிரபல நடிகைக்கு சில்க் உதவியுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.