டி.என்.பி.எஸ்.சி. ஊழலுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வருமா..? புதிய தலைவராக கா.பாலச்சந்திரன் நியமனம்.

இதுவரை இல்லாத அளவுக்கு டி.என்.பி.எஸ்.சியில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள், முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்தன. ஒருசில கைதுக்குப் பிறகு, அந்த பிரச்னைகள் அப்படியே ஓய்ந்துபோயின.


இந்த சூழலில் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கா.பாலச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தஞ்சையில் பிறந்தவர். . பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தஞ்சாவூரில் முடித்து பழனி துணை ஆட்சியராக 1986ஆம் ஆண்டு பணிபுரிய தொடங்கினார். 

1994ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழ்நாடு பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். 2000ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை தர்மபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்தார். 

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்த போது 2000ஆம் ஆண்டு சிறு சேமிப்புத் துறையில் சாதனை படைத்தமைக்காக சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விருதும், பாராட்டும் பெற்றார். ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்த போது 2003ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் துறையில் சாதனை படைத்தமைக்காக சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான விருதும் பாராட்டும் பெற்றார். 

சமூக நலத் துறை, வேளாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை, உணவு மற்றும் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை, தொழிற் துறை, காதி போர்டு, தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், தொழிலாளர் நலத் துறை ஆகிய துறைகளின் தலைவராகப் பணியாற்றியவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வணிக வரி மற்றும் பதிவுத் துறையில் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். 

2018ஆம் ஆண்டு பதிவுத் துறையில் மாண்புமிகு முதலமைச்சர் நல் ஆளுமை விருதும், 2019ஆம் ஆண்டு வணிகவரித் துறையில் மாண்புமிகு முதலமைச்சரின் நல் ஆளுமை விருதும், சுதந்திர தின விழாக்களின் போது மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களால் வழங்கப்பட்டது. சிறப்பாகச் செயலாற்றும் திறனுடைய இவர் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக பணியேற்றுள்ளார்.

பழைய ஊழல் பெருச்சாளிகளை பிடிச்சு ஜெயிலில் தள்ளுங்க சார்.