சொர்க்கத்திற்கு செல்வதற்கு ஆசையா? பரமபதம் அடைய செய்யவேண்டிய தரிசனம் இதுதான்!

முக்கண்ணராகிய ஈசன் முகத்தில் இரண்டு கண்களும் நெற்றியில் ஒரு கண்ணும் கொண்டவர்.


அவரைப் போலவே மூன்று கண்களோடு காட்சி தரும் முகுந்தனை தரிசிக்க வேண்டும் என்றால் செல்ல வேண்டிய தலம் பரங்கிப்பேட்டை. ஆதியில் முத்துகிருஷ்ணபுரி, வருணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இத்தலத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

கஜேந்திர மோட்சம் பெற்ற தலமாக இது கருதப்படுகிறது. திருவஹீந்திரபுரம் தேவநாத சுவாமியின் அபிமான தலம் என்றும் அழைக்கப்படுகிறது.  பல்லவர் ஆட்சிக்காலத்தில் கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், முகலாயர் காலத்தில் முன்மண்டபம் கட்டப்பட்ட கோயில். தலவிருட்சம் – அரளி, தீர்த்தம் - கஜேந்திர புஷ்கரணி. 

நெற்றிக்கண் என்பது சிவன் அம்சம். இங்கு கருவறையில் எழுந்தருளியுள்ள வரதராஜ பெருமாளுக்கு நெற்றிக்கண்ணும் இருப்பதால் இருவராகிய ஒருவர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. இப்பெருமானை வணங்குவோருக்கு எம பயம் என்பதே கிடையாதாம். திருமணத்தடை, கடன் தொல்லை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வீண் பழிக்கு ஆளானவர்கள் இத்தலத்திற்கு வந்து பெருமானை மனம் உருகி சேவித்தால் நற்பலன் ஏற்படுகிறதாம். 

சித்திரை மாதம் முதல் ஆடி மாதம்வரை மூலவருக்கு தைலக் காப்பு சாற்றப்படுகிறது. ஹஸ்த நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. வைகாசி மாதம் சஷ்டி திதியில் வசந்த உற்சவம் நடைபெறும். வைகாசி மாதம் தொடங்கி ஆனி ஆடி மாதம் வரை 48 நாட்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி சீனிவாச பெருமாள் திருக்கோவில் மூலவரான வரதராஜ பெருமாள் மஞ்சள் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி தருவார். திருப்பதியில் பெருமாள் என்னென்ன சேவைகள் செய்யப்படுமோ அவை அனைத்தும் இங்கும் செய்யப்படுகிறது. 

நவராத்திரி உற்சவத்தில் கஜேந்திரவரதர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு போட்டு விட்டு வருவார். தீபாவளி, திருக்கார்த்திகை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. மார்கழி வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு, மாசிமக தீர்த்தவாரி, பங்குனியில் திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பானவை. 

இத்தலத்தில் உள்ள கஜேந்திர புஷ்கரணியை ருண, ரண நிவாரணி என்கிறார்கள். இதில் நீராடினால் கடன் பிரச்சினைகள், நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கவல்லது. இதை பெருமாளுக்கு முன்னால்தான் அருந்த வேண்டும். இதை எடுத்துச் சென்று வீட்டில் சாப்பிடக்கூடாது.

அப்படி சாப்பிட்டால் அதற்கான முழு பலன் கிடைக்காது என்கிறார்கள். இத்தலத்தில் சஞ்சீவிராயர் என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கும் அனுமனிடம் கஜேந்திரனைப் பற்றி வரதராஜப் பெருமாள் உபதேசித்ததாக கூறப்படுகிறது. ஆகையால் ஆண்டுக்கு ஒருமுறை வரதராஜ பெருமாள் கோவிலின் எதிரே இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் எழுந்தருளுவார்.  

நெற்றிக்கண்ணோடு இருக்கும் வரதராஜபெருமாளை வாழ்க்கையில் ஒருமுறை தரிசித்தாலும் நிச்சயம் பரமபதம் அடையலாம் என்கிறார்கள். இந்த கோவிலில் வெளி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் சில வினாடிகளிலேயே மனபாரம் குறைந்து மனதில் மகிழ்ச்சி நிறைவது அனுபவபூர்வமான உண்மை.