மிரட்டும் கோயம்பேடு..! அங்கு இருந்து அரியலூர் வந்த 20 பேருக்கு கொரோனா..! மொத்தம் 53 ஆனது..!

கோயம்பேடு சந்தையில் இருந்து தங்களது சொந்த ஊரான அரியலூருக்கு சென்ற மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதி வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல சென்னையில் இதுவரை சுமார் 1400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் அதிவேகமாக பரவிவரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலாக கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கோயம்பேடு சந்தையில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊரான அரியலூருக்கு திரும்பிய 20 பேருக்கு தற்போது கொரோனா உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காவனூர், உள்ளியக்குடி , கொலையனூர், சிறுகளத்தூர், கடுகூர் பெரியாக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு சென்ற 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 4 பேர் என புதிதாக 24 பேருக்கு அரியலூரில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு சென்றவர்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.அதுமட்டுமல்லாமல் காவலர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக மொத்தமாக அரியலூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.