புரட்சித்தலைவியின் பயிற்சியும் என்னுடைய முயற்சியும்தான் வெற்றிக்குக் காரணம்... தூள் பறத்தும் எடப்பாடி பழனிசாமி.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்குக் கொடுத்திருக்கும் பேட்டி, தமிழகமெங்கும் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அந்த பேட்டியில் அப்படி என்னதான் இருக்கிறது..? இந்தியா டுடே பத்திரிகை சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது.


நான், 1974-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். அந்த காலகட்டத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை எதிர்த்து கட்சி நடத்தி கொண்டு இருந்தார். அதில் இருந்து நான் கட்சியில் தீவிரமாக பணியாற்றினேன். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைத்தேன். யாரிடமும் எந்த சிபாரிசுக்கும் சென்றது இல்லை.

எனது சொந்த உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை அடைந்துள்ளேன். 1989-ல் அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது அம்மா தலைமையிலான அணியை ஏற்று அதில் போட்டியிட்டேன்.

அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனேன். அதிலிருந்து கட்சியில் பல பொறுப்புகளை வகித்தேன். பல வாரியங்களுக்கு தலைவராகவும் பணியாற்றினேன். பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிலும் வெற்றி பெற்றேன்.

2011- ஆண்டு அம்மா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றேன். 2016-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சர் ஆனேன். அப்போது கூடுதல் பொறுப்பாக பொதுப்பணித்துறை இலாகாவும் ஒதுக்கப்பட்டது. அனைத்து பணியையும் நான் சிறப்பாக செய்து வந்தேன்.

அம்மா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் சேவையை செய்வதுதான் எனது பிரதான பணியாகும். மக்கள் பிரச்சனைகளை நான் முழுமையாக அறிந்துள்ளேன். சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வந்ததால் மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை முழுமையாக உணர்ந்தவன்.

மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள், அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து வந்துள்ளேன். அதனால்தான் மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறேன். இந்த திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.

மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதிலும், அரசியலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதிலும் புரட்சித்தலைவி அம்மா எனக்கு பயிற்சியை தந்துள்ளார். நான் எனது சொந்த உழைப்பு முயற்சியால் இந்த நிலையை அடைந்துள்ளேன். அ.தி.மு.க.- அ.ம.மு.க. இணைவதாக கூறுவது தவறு. அவ்வாறு வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. அ.தி.மு.க.வை எதிரிகளால் வீழ்த்த முடியாது. எதிரிகளின் கனவு பலிக்காது.

அ.தி.மு.க. மூலம் பாரதிய ஜனதா தமிழகத்தில் நுழைவதாக கூறுவது சரியல்ல. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மாநில திட்டங்கள் நிறைவேறும் என்பதால், மத்திய அரசுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தோம்.

நாங்கள் போடும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் காப்பி அடிக்கிறார். எங்களிடம் இருந்து கசியும் திட்டங்களை அவரது திட்டங்கள் போல சொல்கிறார். மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரே மேடையில் என்னோடு விவாதிக்க தயாரா? நான் பயணித்த காலம் மிகவும் கடினமானது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருடனும் நான் அரசியல் பணி செய்துள்ளேன். அதில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று கூறியிருக்கிறார்.