விவசாய நிலத்தில் நுழையும் யானையை விரட்டுவதற்கு எளிய வழி இதோ... மின்சார வேலி வேணாமுங்க!

யானைகள் தங்கள் வயலுக்குள் நுழைந்து தோட்டத்தை நாசமாக்கிவிடுகிறது என்று மின்சார வேலி அமைக்கிறார்கள்.


அதில் விழுந்து யானைகள் மட்டுமின்றி புலி, பன்றிகள் ஏன் மனிதர்களும் உயிர் இழந்துபோகிறார்கள். இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் யானைகளை விரட்டுவதற்கு என்ன வழி கையாளப்படுகிறது என்பதை விவரித்திருக்கிறார்கள்.

ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க ‘யானைகளும் தேனீக்களும்’ என்ற பிராஜக்டை உருவாக்கினார் லூசி. யானைகளுக்கு வேல மரங்கள் என்றால் பிடிக்காது, காரணம் அந்த மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுதான். பல ஆண்டுகள் யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, தேனீக்களுக்கு யானைகள் பயப்படுவதைக் கண்டுபிடித்தார் லூசி.

விவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை தேன் கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிடும். பிறகு யானை அங்கிருந்து பின் வாங்கி விடும். இந்தப் பக்கமே வராது. ’’தேனீக்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வருகிறது. யானைகளிடமிருந்து பயிர்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

யானைகள் மிகச் சிறந்த உயிரினங்கள். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தினால் அது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிடுகின்றன. தேன் கூடுகளால் வேலி அமைத்து விட்டால் மனிதர்கள், யானைகளுக்கு மட்டுமில்லை, இயற்கைக்கும் நல்லது’’ என்கிறார் லூசி கிங்.

இதனை நமது விவசாயிகளும் பின்பற்றலாமே..?