கடலுக்குள் 5 சுயம்புலிங்கம். பக்தர்கள் தரிசனத்துக்கு கடல் நீர் வழிவிடும் அதிசயம்!

குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம்


இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் அரபிக்கடலுக்குள் இருக்கிறது. கடலில் அலைகள் அதிகம் உள்ள நாட்களில் இங்கு ஒரு கொடியையும் மற்றும் ஒரு தூணை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் அலைகள் குறைந்த நேரத்தில் கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றால், 5 சுயம்பு லிங்கத்தை தரிசிக்கலாம்.

தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. போரில் வென்ற பாண்டவர்கள், சிவனை வழிபட்டதன் நினைவாக இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.

பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர். இந்த கோவிலுக்கு மாலை நேரங்களில் மக்கள் நடந்தே சென்று பூஜைகள் செய்து வருகின்றனர். படகு போன்றவற்றைப் பயன்படுத்துவதில்லை.