தீபாவளியன்று எந்தத் தெய்வத்தை வணங்க வேண்டும்? தீபாவளிக்கு சர்க்கரைப் பொங்கல் செய்யலாமா?

வாரணாசி எனும் காசியில் ஓடும் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள படித்துறைகளில் ஒன்று ஹனுமன்காட்.


இப்படித்துறைக்கு அருகில் உள்ள காஞ்சி காமகோடி சங்கர மடத்தில் வெள்ளியினாலான முப்பெருந்தேவியர் எழுந்தருளியுள்ளார்கள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாக்ஷி ஆகிய இந்த முப்பெரும் தேவியர்களையும் ஒவ்வொரு வருடமும் தீபாவளியை ஒட்டி வரும் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை, பிரதமை ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

இதனை திரிதேவி தரிசனம் என்று போற்றுவர். நான்கு நாட்களும் நிவேதனமாக லட்டு சமர்ப்பித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இந்த நான்கு நாட்கள் வழிபாடுகள் முடிந்ததும் திரையிட்டு மூடிவிடுவார்கள். கங்கை நதியில் நீராடி இந்த மூன்று அம்பிகைகளையும் ஒரே சமயத்தில் தரிசிக்க குடும்பத்தில் செல்வ வளம் பெருகும்; நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.

இதேபோல் தமிழகத்திலும் உமையவள், சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோரை ஒரே சந்நிதியில் தரிசிக்கும் கோவில் உள்ளது. இது கோயம்புத்தூரில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன ஈச்சனாரி வினாயகர் கோவிலுக்கு அருகில் உள்ளது. இக்கோவிலை மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி மந்திர் என்று அழைக்கிறார்கள்.

இக்கோவிலின் பிரதான தெய்வம் ஸ்ரீ மகாலட்சுமி தாயார்தான். நடுநாயகமாக மகாலட்சுமியும், வலப்புறம் பார்வதி தேவியும், இடப்புறம் சரஸ்வதியும் அமர்ந்துள்ளனர். இவர்களை தரிசித்தால் வேண்டியது கிட்டும்; வீரம், செல்வம், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பர். இங்கு நவராத்திரி, கேதார கௌரி விரதம் என பல விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தீபாவளியன்று முப்பெரும் தேவியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அன்றைய நாளில் பால், சந்தனம், பன்னீர் அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர். தீபாவளியில் சர்க்கரை பொங்கல் என்பது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.

அடுத்து கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில். கோவிலில் நுழைந்ததும் வலப்புறம் அமைந்துள்ள கிரிகுஜாம்பிகை கோவிலில் நடுநாயகமாக கிரிகுஜாம்பிகை எழுந்தருளியிருக்க லட்சுமி வலப்புறமும், இடப்புறம் சரஸ்வதியும் அமர்ந்திருக்கிறார்கள். இத்திருமேனிகள் கற்சிலையோ சுதை வடிவமோ அல்ல. தேவதாரு என்னும் தெய்வாம்சம் பொருந்திய மரத்தினால் உருவான திருமேனிகள் என்று வரலாறு கூறுகிறது.

இத்தேவியர்களுக்கு அபிஷேகங்கள் கிடையாது. மார்கழியில் மூன்று தேவியருக்கும் புனுகு சாற்றப்படுகிறது. அப்போது 45 நாட்கள் திரை போட்டு சந்நிதி மூடப்பட்டிருக்கும். அந்தத் திரை சீலைக்குத்தான் பூஜைகள் நடைபெறும். தீபாவளி திருநாளில் புதிய வஸ்திரங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் முப்பெருந்தேவியர் காட்சி தருவார்கள். இத்திருக் காட்சியை தரிசிக்கும் பக்தர்கள் வாழ்வில் என்றும் சுகம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.