சனி நீராடு என்றால் என்னங்க!? - மருத்துவ ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் விளக்கம்!

சனி நீராடு!, தலைமுறை தலைமுறையாய் நம் சமூகத்தில் தொட்டுத் தொடரும் ஒரு வாசகம்.


நம்மைப் போல உஷ்ணமான சீதோஷ்ன நிலை பகுதியில் வாழ்வோருக்கு தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள் சொல்வதை, என்றைக்கோ நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இதன் பின்னால் இருக்கும் அநேக விஷயங்கள் இன்னமும் ஆய்வு செய்யப் படாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை.

எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.

கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்

கெடியான திங்கள் பலன்தான் பொருளுண்டாகும்

பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்

பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்

தாளு வியாழன் பலன் தான் கருத்தை போக்கும்

தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்

நாளு சனியின் பலன்தான் எண்ணெய் மூழ்க

நட பொருளும் சகதனமும் வரும் சாதிப்பாயே.

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும்.

வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற் பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார். இவற்றை அனுபவமோ அல்லது ஆராய்வோ இல்லாமல் எழுதியிருக்க முடியாது. இவற்றின் பின்னால் இருக்கும் சூட்சுமங்களும், அறிவியல் நுட்பங்கள் இன்னமும் ஆராயப் பட வேண்டியுள்ளது.

ஜோதிட ரீதியாக சனி நீராடு என்பதின் விளக்கத்தினை பார்ப்போம். சனி நீராடு என்பது சனி கிரகத்தின் தானியமான எள்ளிலிருந்து பெறும் நல்லெண்ணை குளியளைதான் குறிக்கிறது. அது ஏன் நல்லெண்ணை? அனைத்து என்னைகளுக்கும் சனி பகாவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது.

உடல் கட்டு மற்றும் எலும்பிற்க்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியள் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. அது ஏன் வாரத்தில் ஏழு நாட்கள் இருக்க ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமையும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளும் பரிந்துரைக்கபடுகின்றது? சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார்.

வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனீஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும்.