குழந்தைகளுக்கு இறைவன் நாமம் சூட்டப்படுவதன் காரணம் இதுதான்!

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்ததற்கு காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.


ஒரு மன்னன் பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் அவனுக்கு எந்த வேலையையும் செய்ய முடியாது. ஆனாலும் அவனின் முன் வினை அவனை தொடர்ந்தது. அதன் பலனாக அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன்னால் சரிவர நாட்டை கவனிக்க முடியாது போகவே, தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான்.

அந்நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை. அச்சுதா... அச்சுதா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள், என சதா நேரமும் புலம்பிக்கொண்டே இருந்தான்.ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம், "சுவாமி, நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் உயிர் பிரிய மறுக்கிறதே" என அழுதான். முனிவர் அவன் நிலை கண்டு அவனை தேற்றி , "மன்னா! நீ அன்னதானம் செய்தாயா?" என்றார்.

மன்னனும் ஆமாம் சுவாமி! தினமும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன், என்றான். "சரி ,இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. அரைகுறையாக உணவிட்டால், சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்" என்றார் முனிவர்.

அவர் சொன்னதில் மன்னனுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு மகானே சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான். சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.இதென்ன ஆச்சரியம், என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில், முனிவர் மீண்டும் வந்தார்."சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே" என்றான் மன்னன்.

"மன்னா! நானும் வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது, அச்சுதா... அச்சுதா என பரந்தாமனின் பெயரைச் சொல்லி உணவிடுகின்றனர். அச்சுதன் என்று பெயர் சொன்னால், உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ பெருமாள் பெயரைச் சொல்வதையும் நிறுத்து" என்றார்.

அதிர்ச்சியடைந்த மன்னன் மறுத்து விட்டான். "எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். ஆனால், பகவான் பெயரைச் சொல்வதை மட்டும் என்னால் நிறுத்த முடியாது. நீண்டநாளாக ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் ஒருவரால் விட்டுவிட முடியாது" என சொல்லிவிட்டான். மன்னனுடைய மன உறுதியை கண்டு மகிழ்ந்த பரந்தாமனும் மன்னன் முன் தோன்றி, அவனைப் பாராட்டி, வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தையும், பிறவா நிலையும் தந்து மகிழ்ந்தார்.

கடவுளின் நாமத்துக்கு தான் எவ்வளவு சக்தி. நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான். இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்னால் அவன் அருளுக்கு பாத்திரம் ஆவோம்.