தெய்வங்கள் கோவிலுக்குள் பேசும் சத்தம் கேட்கும் விசித்திர கோவில்

பிஹாரில் இருக்கும் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி திருபுரசுந்தரி ஆலயம்.


இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நம் நாட்டில் புராதன கோயில்கள் ஏராளமாக இருந்தாலும், ஒரு சில கோயில்கள் மிகவும் விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில் ராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோவிலும் அடக்கம். இக்கோயிலில் இரவில் தெய்வங்கள் ஒன்று கூடி பேசிக் கொள்வது போல் சத்தம் கேட்பது அவ்வூர் மக்களுக்கு மர்மமான விஷயமாக இருந்து வருகிறது.

ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் ‘தாந்திரிக் பவானி மிஸ்ரா’ என்பவரால் நிறுவப்பட்டது. அவர் அக்காலத்திலேயே தாந்திரீகம் மற்றும் வேத முறைப்படி எழுப்பிய இக்கோவில் மிகவும் மதிப்பிற்குரியதாக கருதப்படுவதால் இங்கு நிறைய தாந்திரீகர்கள் மற்றும் வேத சாஸ்திரம் பயின்றவர்கள் வருகை தருகின்றனர். இங்கு திரிபுரா, துமாவதி, பகுளாமுகி, தாரா, காளி, சின்ன மஸ்தா, ஷோடசி, மாதங்கி, கமலா, உக்ர தாரா, புவனேஷ்வரி போன்ற தேவியர்கள் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மூலஸ்தானத்தில் துர்காதேவி வீற்றிருக்கிறாள்.. இந்திய மக்களால் அதிக அளவில் வணங்கப்படும் தெய்வமாக துர்காதேவி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமல்லாமல் நம் தமிழ்நாட்டிலும் தீயவைகளை அழிக்கும் துர்கா தேவிக்கு தனி சிறப்புகள் உண்டு.

இந்த கோவிலில் இரவு வேளை பூஜை முடிந்ததும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சத்தம் மதில் சுவர் வாயிலாக கேட்கப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதால் இக்கோவில் மக்களிடையே பிரபலமானது. இதனை ஆராய்ச்சி செய்வதற்கு வந்த விஞ்ஞானிகள் குழு ஒரு நாள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர். வழக்கமாக இரவு நேரத்தில் இங்கே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இரவில் கோவிலின் மதில் சுவரில் எதிரொலித்த வண்ணம் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை போல் சத்தங்கள் கேட்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சத்தம் மனிதர்கள் பேசுவதை போலவே எதிரொலித்தது. ஆனால் நிச்சயமாக அது இந்த கோவிலின் வெளியில் இருந்து வரவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இந்நிலையில் எதனால் இந்த சத்தம் எழுகிறது? என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர் ஆராய்ச்சி செய்ய வந்த விஞ்ஞானிகள் குழு.