நிவாரண நிதியில் பிரதமர் மோடியை துவைத்தெடுக்கும் ஸ்டாலின், தட்டிக் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பட்டும் படாமலும் விமர்சனம் செய்திருக்கிறார்.


மிக்ஜாம் புயலுக்கு தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. எனவே ஒத்த ரூபாய் கூட தரவில்லை என்று பிரசாரமே செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக 115 புள்ளி 49 கோடி ரூபாயும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக 160 புள்ளி 61 கோடி ரூபாயும் நிவாரண நிதியாக மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு 3,454 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதற்காக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக தமிழகம் கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழக அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், மத்திய பாஜக அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பட்டும் படாமலும் விமர்சனம் செய்திருக்கிறார்.