குழந்தை பாக்கியம் அருளும் குமரி குருவாயூர் கிருஷ்ணர்..! அர்த்தஜாம பூஜை அற்புதம்

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்.


இக்கோவிலின் மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில், இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக குழந்தை போலவே காட்சியளிப்பார். மறுநாள் உறியடி உற்சவம் நடக்கும். உற்சவர் ராஜகோபாலர் ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்த போது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார். 

இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜ கோபாலரையும் வடித்துள்ளனர். மூலஸ்தானம் எதிரிலுள்ள கொடிமரத்தைச் சுற்றிலும், அஷ்டதிக் பாலகர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. முன் மண்டபத்தில் கருடாழ்வார் இருக்கிறார். நம்மாழ்வார், பெரியாழ்வார், விஸ்வக்சேனர் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர். 

கி.பி. 13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த ஆதித்தவர்மா என்ற மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட இடமாக தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதி இருந்தது. குருவாயூரப்பனின் பக்தரான இவர், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் குருவாயூரப்பனுக்கு கோவில் எழுப்ப ஆசைப்பட்டார். அவ்வேளையில் கிருஷ்ணர், கையில் வெண்ணெயுடன் குழந்தைக் கண்ணனாக அவனது கனவில் காட்சி தந்தார். குறிப்பிட்ட இடத்தில், தனக்கு கோவில் எழுப்பும்படி கூறினார்.  

அதன்படி கோவில் கட்டிய மன்னன், தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினான். 

தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு செய்வித்து, பால்பாயாசம், உன்னியப்பம், பால், பழம், அரிசிப்பொரி, வெண்ணெய், அவல், சர்க்கரை படைக்கின்றனர். இந்த தரிசனத்தை கண்டு நைவேத்ய பிரசாதம் உட்கொள்வோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் நான்காம் நாளில் கிருஷ்ணர் கையில் வெண்ணெய் பானையுடன், வெண்ணெய்த்தாழி உற்சவம் காண்கிறார். இவ்விழாவின் ஏழாம் நாளில் இவர் இந்திர வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் விசேஷமாக நடக்கும். சித்ரா பவுர்ணமியன்று கிருஷ்ணர், இங்குள்ள பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் காண்பார்.  

ஆடி கடைசி சனிக்கிழமையன்று( நாளை) இவருக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மூலஸ்தானம் முழுவதும் மலர்களால் நிரப்பி, சுவாமியின் முகம் மட்டுமே தெரியும்படியாக அலங்கரிப்பர். இவ்வேளை யில் சுவாமியை தரிசித்தால் மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

இந்த கோவிலின் வெளி பிரகாரத்தில் ஸ்ரீ கணபதிக்கும், ஸ்ரீ சாஸ்தாவுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. இங்குள்ள உற்சவ மூர்த்தி மற்றும் பூதத்தானுக்கு ஜோடி பாதுகைகளுடன் தனித்தனி சன்னதி இருக்கிறது. இங்கே வீற்றிருக்கும் ஸ்ரீபூதத்தான் இரவு நேரத்தில் பாதுகைகள் அணிந்து கோவில் சுற்று வட்டார பகுதிகளில் மக்களை பாதுகாப்பதற்காக வலம் வருகிறார் என்று நம்பப்படுகிறது. 

சந்தான பாக்யம் தருவான், நம்பினோரைக் கைவிடமாட்டான் இங்குள்ள கிருஷ்ணன் என்று பக்தர்கள் நம்புவதால் குமரியின் குருவாயூர் என்று இக்கோயிலை சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர்.