அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு.
திருச்செந்தூர் அதிசயமான நாழிக்கிணறு! அடேங்கப்பா புராண வரலாறு!

அதன் நீர் நோய்களைத் தீர்க்கும் குணமுடையது. கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இதில் நல்ல தண்ணீராக இருப்பது வியப்பான விஷயம். இந்தக் கிணறு உருவானது சம்பந்தமான புராணச் சம்பவம் ஒன்று உள்ளது.
அசுர குலத்தைச் சார்ந்தவர்களான தாரகாசுரனும் சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப் படுத்தியும், மக்களைக் கொடுமைப்படுத்தியும் ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கே தாரகாசுரனை முருகன் வீழ்த்தி விட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.
சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இதில் சூரபத்மனின் படைகளும் அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது ஆற்றல் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால் முருகனின் சக்திக்கு முன்னால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். சூரபத்மன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும் மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்கு பின்பே முருகன் சேவல் கொடியுடனும், மயில் வாகனத்துடனும் காட்சி புரிந்தார்.
போர் முடிந்ததும் தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்பட முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அதுவே நாழிக்கிணறு. 14 அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணற்றின் நீர் உப்பாகவும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். இதன் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது.
ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்திருப்பது அதிசயத்திலும் அதிசயம்.
திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு பின்பு இந்தக் கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்வது வழக்கம்.