மாசி மகம் – ஸ்ரீலலிதா பரமேஸ்வரி ஆவிர்பாவ தினம் – சகல சௌபாக்யங்களும் அருளும் பராசக்தி

மாசி மாதம் என்ன கொடுத்து வைத்ததோ தெரியவில்லை. மாசிமகம் பௌர்ணமி ஶ்ரீலலிதா பரமேச்வரி ஆவிர்பாவ தினம். மறுநாள் பூரம் லலிதையேயான காமாக்ஷியின் ஆவிர்பாவ தினம்.


சிதக்னி குண்டத்தில் ஶ்ரீலலிதா பரமேச்வரீ தோன்றினாள் என லலிதோபாக்யானம் செப்புகிறது. அன்னை சிதக்னி குண்டத்தில் ஆவிர்பவித்து வந்தாள் பண்டாசுரனை ஸம்ஹரிக்க. தக்ஷிணாமூர்த்தி ஸம்ஹிதை, ருத்ரயாமளம், த்ரிபுரா ரஹஸ்யம் ஆகியன ச்ருஷ்டியின் ஆதியில் ஶ்ரீலலிதேச்வரீ தனது ஸங்கல்ப மாத்ரத்தால் ஶ்ரீபுரத்தை ச்ருஷ்ட்டித்தனள் எனக் கூறும்.

பின்னர் ஶ்ரீசக்ர ச்ருஷ்டி, நவசக்ர தேவிகள் ச்ருஷ்டி, பஞ்சபஞ்சிகைகள் ச்ருஷ்டி என விரியும். ஆயின் பின்னர் மஹாசம்புநாதர் சிதக்னி குண்டத்தில் மஹாயாகமியற்ற ,பராசக்தி தோன்றினாள். ஸம்பூர்ண ஆத்ம விரோதியான பண்டன் தனது ஸைன்யங்களோடு தேவியுடன் யுத்தம் பண்ண, ஆத்மஸ்வரூபமான பரதேவதை அவனை அழித்தாள் என்பது உபாக்யானம்.

ஶ்ரீலலிதா பரமேச்வரியின் அவதார தினமானது ஆத்மஸாக்ஷாத்காரம் அடைதலையே குறிக்கின்றது. பாவனோபநிஷத் வாக்யப்படி "ஸ்வயமேவ ஆத்மா லலிதா" என்பதை உணர்தலே லக்ஷ்யமாம். லகாரம் நிர்குண ப்ரஹ்மத்தையும், ககாரமும் ஆகாரமும் ஜீவனையும் குறிக்கின்றது. லகாரமும் இகாரமும் இனைந்து தேவீ இனைப்புப் பாலமாய் இருப்பதை குறிக்கின்றது.

ல -- நிர்குண பர ப்ரஹ்மம்

லி -- கருணை ப்ரதானமான ஸகுண ப்ரஹ்மம்

தா -- ஜீவன்

ப்ரஹ்மமான தனக்குள் ஜீவனை சேர்த்துக் கொள்ள ஶ்ரீராஜராஜேச்வரீ தன்னிலை இறங்கி வருதலையே "லலிதா" எனும் நாமம் குறிக்கின்றது. ஸர்வ தினங்களும் அவளுக்கு உயர்வானாலும் ஶ்ரீலலிதா மஹா த்ரிபுரஸுந்தரீ தேவியாக, ஶ்ரீகாமாக்ஷியாக ஶ்ரீவித்யை ஆவிர்பவித்த தினங்களில், அவளுக்கு ப்ரியமான ஸஹஸ்ரநாமாதிகள், ஸ்தோத்ரங்கள் சொல்லி அவளை நமஸ்கரிப்போம்.

காமேச்வரனான ஏகாம்ரநாதன் கட்டின திருமங்கலியத்தை தொங்க தொங்க கட்டிக்கொண்டு, தங்கக் காமாக்ஷி, வைரக் காமாக்ஷி, பட்டுக் காமாக்ஷி, செல்லக் காமாக்ஷி ஸர்வ ஸௌபாக்யவதியாக, நித்ய ஸுவாஸினியாக, ஸர்வானந்தமய மஹாசக்ர பீடத்தில், பஞ்சப்ரேத மஹாமஞ்சத்தில் பூர்ணானந்தமயமாக இருந்து கொண்டு, ஸௌபாக்யத்தையும், ஸகல ஸம்பத்துக்களையும், மோக்ஷத்தையும் அனைவர்க்கும் அனுக்ரஹிக்கும் படி ப்ரார்த்திப்போம்.