நான் சாகலய்யா..! நல்லாத் தான் இருக்கேன்..! வீடியோ வெளியிட்டு நெகிழ வைத்த பரவை முனியம்மா!

உடல்நலம் முன்னேறி வருவதாக பரவை முனியம்மா வெளியிட்டுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே பரவை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பிறந்தவர் முனியம்மா. 2003-ஆம் ஆண்டு சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்து வெளிவந்த தூள் எனும் திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு பாட்டியாக நடித்தார். அந்த படத்தில் அவர் பாடிய "சிங்கம் போல" என்னும் பாட்டு தமிழ்நாடு முழுவதும் பரவியது.

பின்னர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் பரவை முனியம்மா நடித்து வந்தார். 2014-ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடித்த "மான்கராத்தே" என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டு வந்தன. இவருடைய உடல் நிலை மோசமானதை அறிந்த முன்னாள் முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதா அவர்கள் வங்கியில் பரவை முனியம்மாவின் பெயரில் 6 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக அளித்தார். அதன் மூலம் அவருக்கு 6 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் கிடைத்துவந்தது.

அவருக்கு 3 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இளைய மகன் செந்தில்குமாரை தவிர மற்றவர்களுக்கு திருமணம் செய்துவிட்டார். இந்நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2 சிறுநீரகங்களும், நுரையீரல்களும் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும் பணமில்லாத காரணத்தினால் அவருடைய மகள்கள் அவரை மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்துவிட்டனர். பரவை முனியம்மாவுக்கு மேல் சிகிச்சை செய்வதற்கு திரைத்துறையினரும் தமிழக அரசும் உதவி செய்ய வேண்டுமென்று அவருடைய மகள்கள் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் பரவை முனியம்மாவின் உடல்நிலை குறித்து அறிந்த பிரபல நடிகரான அபி சரவணன், அவருக்கு உதவ முன் வந்துள்ளார். நேரடியாக பரவை முனியம்மாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். 

மேலும் தற்போதைய மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்தும், இனி வரும் மருத்துவ செலவுகளை முழுவதுமாக ஏற்பதாகவும் கூறியுள்ளார். அபி சரவணன் பரவை முனியம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது. "நடிகை பரவை முனியம்மா சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நன்றாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். அவருடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் மருத்துவ நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பரவை முனியம்மா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், "நான் நல்லா இருக்கேன்.. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க.. ரத்தம் ஏத்திட்டு இருக்காங்க" என்று கூறியுள்ளார். அவருடைய குரலில் பழைய கம்பீரமும், துணிவும் தென்படுவதாக அவருடைய ரசிகர்கள் கூறியுள்ளனர். 

இந்த செய்தியானது பரவை முனியம்மாவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.