மருத்துவர் செய்த விபரீத செயல்! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

13 வயது சிறுமிக்கு தவறான ஊசி போட்ட மருத்துவரை மா ராஷ்டிரா மாநிலம் புனேவில் போலீசார் கைது செய்தனர்.


2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதிநியா என்ற சிறுமிக்கு ஜலதோஷம் ஏற்படவே புனேவில் உள்ள ராமகிருஷ்ணா கிளினிக்குக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

 

சிறுமியை பரிசோதித்த மருத்துவர் பாபன் ஜாதவ், ஊசி ஒன்றை அச்சிறுமிக்கு செலுத்தியுள்ளார். பின்னர் சிறுமியை பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். மறுநாள் ஊசி போட்ட இடத்தை சுற்றி கொப்புளங்கள் வெடிக்க தோன்றின.

 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வேறொரு மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இரண்டு நாட்களில் அவர் உயிரிழந்தார்.

 

உடற்கூறு ஆய்வில், சிறுமிக்கு தவறான ஊசி போடப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை அறிந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அரசு மருத்துவமனை குழுவை நாடினர்.

 

அந்த குழுவானது அண்மையில் அளித்த அறிக்கையில், டாக்டர் பாபன் ஜாதவ் சிறுமிக்கு தவறான ஊசியை போட்டதுடன் அலட்சியமாக சிகிச்சை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

  தனது மகளுக்கு நேர்ந்த கதி குறித்து கண்ணீர் மல்க பேசிய அவரது தந்தை அருண், பிறந்தநாள் கொண்டாடிய மூன்று நாட்களிலேயே தனது மகள் இறந்துவிட்டதாக கண்ணீர் வடித்தார். தாங்கள் ஏழை என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.