மனிதர்களின் வாழ்க்கையில் பசுவின் மகிமை என்ன என்று தெரியுமா உங்களுக்கு?

ஸ்ரீமாதா என்றால் தாயை குறிப்பிடுவது. தாய் இல்லாமல் உலகம் இல்லை. ’கோ’ என்ற சொல் பூமி, தாயார், வாக்கு, பசு முதலான பல பொருள்களுடைய சொல். ஆனால் ’கோ’ என்றால் பசுவையே குறிப்பதாக கொள்கிறோம்.


பசுவானவள் பரமேஸ்வரனுக்கு தாயாகவும், வஸுக்களுக்குப் பெண்ணாகவும், ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும் இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது.  பூஜிக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது.  இன்றைக்கும் காசியில் போய் பார்த்தால் தெருவெல்லாம் சுதந்திரமாக திரிந்து கொண்டும், படுத்துக் கொண்டும் பசுக்கள் இருப்பதைக் காணலாம். ஒருவரும் அதை அடிக்கவோ, விரட்டவோ மாட்டார்கள். ஒதுங்கிப் போய்விடுவார்கள்.

பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவை படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதனால் இன்றைக்கும் பசுவின் பின்புறத்தில் லட்சுமியும் கங்கையும் இருப்பதாக சாஸ்திரம்.  அதனால் பசுவின் சாணமும் கோமூத்திரமும் சகல பாபங்களையும் போக்கி லக்ஷ்மி கடாக்ஷம் அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.  பாற்கடலைக் கடையும் போது காமதேனு பிறந்தது என்பார்கள்.  ஆயினும் வைகுண்டம், சத்தியலோகம் என்பது போல கோலோகம் என்று இருக்கிறது.  அதில் ராதையுடன் ஸ்ரீகிருஷ்ணன் பக்த ரக்ஷகனாக இருக்கிறார்.  அங்கு காமதேனுவைப் படைத்து அதன் கன்றுகளை கோலோகம் முழுவதும் வைத்து கிருஷ்ணனும் ராதையும் பூஜை செய்வதாக தேவி பாகவதத்தில் இருக்கிறது.  இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லியிருக்கிறார்.

பசுவானது தன் கன்றுக்குகூட கொடுக்காமல் பாலை மனிதனுக்கு அளிக்கிறது. தாயானவள் குழந்தைக்கு அதிக பட்சம் ஒரு வருஷம் தான் பால் கொடுக்கிறாள். பசுவானது எந்த வயதினருக்கும் எத்தனையோ ஆண்டுகளுக்கு பால் கொடுத்து போஷிக்கிறது/  இதனால் தாயை விட பசு உயர்ந்தது.

பசுவை தினமும் குளிப்பாட்டி முன்புறம் பின்புறம் மஞ்சள் குங்குமம் இட்டு புஷ்பம் எடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.  வீட்டில் கழுநீர், காய்கறிக் கழிவுகள் முதலியவற்றை பசுவுக்கு கொடுக்கலாம்.  பசு ஈன்று கொண்டிருக்கும் சமயம் முன்னும் பின்னும் இரு முகமாக இருக்கும் போது பிரதக்ஷிணம் செய்து தீபாராதனை செய்து நமஸ்கரித்தால் அளவிடமுடியாத புண்ணியம் என்று சொல்லப்பட்டுள்ளது. பசுவைப் பூஜித்தால் சகல தெய்வங்களையும் பூஜித்த பலன் கிட்டும்.