ருசியான ஆரோக்கியமான சாம்பார் வடை செய்யலாம் வாங்க!!!

பொதுவாக வடை என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அதிலும் உளுத்தம் பருப்பு வடை என்றால், மிகவும் பிடிக்கும். இத்தகைய உளுத்தம் பருப்பு வடை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட.


சிலர் இந்த வடையை சாம்பாரில் போட்டும் சாப்பிடுவார்கள். அதற்கென்று சாம்பார் தனியாக தயாரிக்க வேண்டும். அப்போதுதான் வடை ருசியாக இருக்கும். இந்த சாம்பார் வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை:

உளுத்தம்பருப்பு - அரை கப்,

உப்பு - தேவைக்கு,

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப்,

பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப்,

எண்ணெய் - தேவையான அளவு.

சாம்பாருக்கு: துவரம்பருப்பு - அரை கப்,

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் - 1,

தக்காளி - 3,

புளி - நெல்லிக்காய் அளவு,

பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு,

உப்பு - ருசிக்கேற்ப.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன்,

நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: தனியா - 1 டேபிள்ஸ்பூன்,

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 5,

வெந்தயம் - அரை டீஸ்பூன்,

சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள்.

எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.

பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள்.

உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள். சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள்.

எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து, ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள்.

பரிமாறும்பொழுது, சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.