புகார் எண் மீது எக்கச்சக்க புகார்

மாநகராட்சிக்கு மேயரான தினத்திலிருந்து தினமும் சைதை துரைசாமி வருகை தருவதும் முழு நேரப் பணியாளர் போன்று எல்லா நேரமும் அங்கேயே இருப்பதும் அதிகாரிகளும் பணியாளர்களும் அதுவரையிலும் கண்டிராத ஒரு புதுமை.


என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 13

மாநகராட்சிக்கு மேயரான தினத்திலிருந்து தினமும் சைதை துரைசாமி வருகை தருவதும் முழு நேரப் பணியாளர் போன்று எல்லா நேரமும் அங்கேயே இருப்பதும் அதிகாரிகளும் பணியாளர்களும் அதுவரையிலும் கண்டிராத ஒரு புதுமை.

தினமும் புகார் மனுக்கள் வாங்குவது மட்டுமின்றி, ‘நேற்று எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன, மற்ற மனுக்கள் நிலை என்னவாக இருக்கிறது?’ என்று முழு விளக்கம் கேட்பார். ஏனோதானோவென்று ஒரு எண்ணிக்கையை சொல்லி தப்பித்துவிட முடியாது.

பூங்கா, சாலை, சுகாதாரம், மேம்பாலம், கட்டிடம், நகரமைப்புப்பிரிவு, சிறு சேமிப்பு, திடக்கழிவு மேலாண்மை என பரந்துவிரிந்திருக்கும் ஏதாவது ஒரு துறையில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் தென்பட்டால், உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பேசுவார்.

மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏதேனும் வசதிகள் தேவைப்படுகிறதா என்று விசாரித்து, அதற்குத் தேவையான உதவிகள் செய்வார். ஆனால் அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துவிடுவார். அதனால் புகார் மனு மீதான நடவடிக்கை மிகச்சிறப்பாக இயங்கத் தொடங்கியது.

இந்த நேரத்தில் மாநகராட்சியின் புகார் பிரிவு தொலைபேசி எண் 1913 மீது புகார் வந்தது. மாநகராட்சிக்கு வருகை தந்த ஒருவர், ‘1913 எண்ணுக்கு புகார் செய்தால் நீண்ட நேரம் யாரும் எடுப்பதே இல்லை. மீண்டும் மீண்டும் போன் செய்தால் எப்போதாவது ஒரு முறை எடுத்துப் பேசுகிறார்கள். ‘உங்கள் புகார் ஏற்கப்பட்டது’ என்று பதில் சொல்கிறார்கள். எத்தனை நாட்கள் கழித்து புகார் செய்தாலும் இந்த ஒரு பதில் தவிர வேறு எதுவும் சொல்வதில்லை, எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை’ என்று புகார் சொன்னார்.

இதனை சரிபார்ப்பதற்காக மேயர் சைதை துரைசாமி அவரது நண்பர் ஒருவரை அழைத்து புகார் கொடுக்கச் சொன்னார். அவரும் சைதை துரைசாமி கண் முன்னரே புகார் எண்ணுக்கு போன் செய்தார். போன் எடுக்கப்படவே இல்லை. மீண்டும் மீண்டும் போன் செய்த பிறகும் அதே நிலையே நீடித்தது.

உடனே நேரடியாக புகார் எண் பிரிவுக்குச் சென்றார் சைதை துரைசாமி. அங்கே என்ன நடந்தது?

- நாளை பார்க்கலாம்