பாரதிய ஜனதா கட்சி இல்லாமல் அ.தி.மு.க. தனித்து தேர்தலை சந்திக்கும் என்று பேசப்படுவது செயலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார் பா.ஜ.க. பிரமுகர் .
மோடி இல்லாமல் தேர்தலை சந்திக்க எடப்பாடியால் முடியுமா? சவால் விடும் பா.ஜ.க. பிரபலம் !!!

மோடியை மீண்டும் பிரதமராக அமர்த்துவதற்கு அ.தி.மு.க. கூட்டணி உழைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி மேடையில் அறிவிப்பார் என்றுதான் பா.ஜ.க. எதிர்பார்த்து மோடியை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு அழைத்துவந்தது. ஆனால்,அப்படியொரு முழக்கம் எழுப்பப்படவில்லை. அதுமட்டுமின்றி, மோடியுடன் பேசுவதற்கு எடப்பாடி தனியே நேரம் கேட்கவும் இல்லை. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத பா.ஜ.க. கடும் அப்செட்.
ஆனால், இன்னமும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. நழுவவில்லை, அப்படி போகவும் முடியாது. இந்தக் கூட்டணியில் இருப்பதுதான் எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.மு.க. அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு என்று சொல்கிறார் ஒரு முக்கிய பா.ஜ.க.பிரமுகர்.
மத்திய பெண் அமைச்சருக்கு நெருக்கமான ஒரு பிரமுகர் நம்மிடம் இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்துப் பேசினார்.
‘’அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கி தினகரனால் பாதிக்கப்பட்டுள்ளது.. அதனால் தனித்துநின்று ஜெயிப்பது அ.தி..மு.க.வினால் முடியவே முடியாது. எதிர்க்கூட்டணியான தி.மு.க. மிகவும் உறுதியாக இருக்கிறது. இப்போதே பேச்சுவார்த்தை தொடங்கி கேண்டிட்டேட் வரையிலும் தேர்வு செய்துவிட்டார்கள்.. இப்போதும் அ.தி.மு.க. தயங்குவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.
அதாவது சிறுபான்மையினர் ஓட்டு காலம்காலமாக அ.தி.மு.க.வுக்குக் கிடைத்துவந்தது, இனி அது கிடைக்காது என்றே நினைக்கிறார்கள்.
பா.ஜ.க. கூட்டணி வேண்டாம் என்று ஒருசில அமைச்சர்கள் மட்டுமே உரக்கப் பேசுகிறார்கள். ஆனால், அவர்களும் தனித்து நின்று அ.தி.மு.க. ஜெயித்துவிடும் என்று சொல்வதில்லை. எப்படியேனும் இது நாடாளுமன்றத் தேர்தல் எனும்போது ஒரு பிரதமர் வேட்பாளரை முன்வைத்துத்தான் தேர்தலை சந்திக்க வேண்டும். கடந்தமுறை ஜெயலலிதாவுக்கே அந்த ஆசை இருந்தது,அதற்கான ஆளுமையும் இருந்தது. ஆனால், இப்போது அப்படிப்பட்ட தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் அவர்களுக்கு இருக்கும் சாய்ஸ் மோடி அல்லது ராகுல் என்பதுதான். இப்போது வேறு வழியில்லாமல் மோடியைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்தலில் பா.ஜ.க. இல்லாத கூட்டணி அமைத்தால் நிச்சயம் வெல்லமுடியும் என்ற உறுதி அ.தி.மு.க.வுக்குக் கிடையாது.ஏனென்றால் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. போன்ற கட்சிகளுக்கு சீரான ஓட்டுவிகிதம் அனைத்துத் தொகுதிகளிலும் கிடையாது.பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ், அன்புமணிதான் எடப்பாடியை தவறான வழிக்கு அழைத்துச்செல்கிறார்கள். அதாவது தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. கூட்டணி அமைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லை என்ற உண்மை எடப்பாடிக்குத் தெரியும்.
ஏனென்றால், தேர்தலில் பா.ஜ.க. ஜெயித்து ஆட்சிக்கு மீண்டும் வந்துவிட்டால், தேர்தல் நேரத்தில் மதிக்காத அ.தி.மு.க.வில் ஒரு தலைவரையும் வெளியே விட்டுவைக்காது. ஒவ்வொரு அமைச்சர் மீதும் அத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஒருவேளை ராகுல் ஜெயித்து வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு ஆபத்துதான். ஏனென்றால் அ.தி.மு.க.வில் அத்தனை பேரையும் சிறைக்கு அனுப்பும்படி ராகுலுக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுப்பார். எப்படியென்றாலும் எடப்பாடிக்குச் சிக்கல்தான்.
அதனால் எதிர்கால ஆட்சியின் நன்மையைக் கருதி பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பதையே அவர் அறிவிப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம். இப்போது அறிவித்தால் சலசலப்பு வரலாம் என்பதால், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் சட்டென்று அறிவித்து அடுத்தகட்ட வேலைகளில் இறங்குவார் என்று உறுதியாகச் சொல்கிறார்.
கட்டாயக் கல்யாணம் கேள்விப்பட்டிருப்போம். கட்டாயக் கூட்டணி என்றால் இதுதானோ..?