ஒரே பைக்கில் 3 பேர்! நள்ளிரவில் அதிவேகம்! சாலையில் நின்று கொண்டிருந்த லாரி! நொடியில் நேர்ந்த விபத்து! பறிபோன உயிர்கள்! சென்னை சம்பவம்!

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவமானது திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வில்லிவாக்கம் அம்மன்குட்டை பகுதியிலுள்ள வள்ளியம்மை தெருவில் நாகப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் பிரசாந்த். பிரசாந்தின் வயது 20. பச்சையப்பன் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார். 

இவருக்கு சதீஷ் (18) மற்றும் விஜய் (17) ஆகிய 2 நண்பர்கள் உள்ளனர். நண்பர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 12:45 மணியளவில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். வாகனத்தை பிரசாந்த் ஓட்டி வந்துள்ளார்.

திருமங்கலம் மேம்பாலத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனமானது கட்டுப்பாட்டு இழந்துள்ளது. சாலையோரத்தில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் பயங்கரமாக மோதியுள்ளது. 

மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே பிரசாந்த் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த சதீஷ், விஜய் ஆகியோரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.‌ ஆனால் சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார். சதீஷ் உயிருக்கு போராடி வரும் சூழலில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.