தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய பாக்கித் தொகை - துறைவாரியாக பட்டியல் போடும் பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டு அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய பல்வேறு நிதி, வரிப்பங்குகளைத் தராமல் நிறுத்திவைத்திருப்பது வஞ்சகமாகும் என்று மார்க்சிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.


அக்கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அ. சவுந்தரராசன் தலைமைவகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், பி. சம்பத், உ. வாசுகி ஆகியோர் உள்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

இதில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி பாக்கி குறித்து முக்கியமாக இடம்பெற்றுள்ளது. “மாநிலங்களில் வருவாய்க்கான வாய்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு கொஞ்சம், கொஞ்சமாக கபளீகரம் செய்துள்ள நிலையில் பல மாநிலங்கள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. தமிழக அரசும் ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய பல்வேறு நிதிவகைகளை தராமல் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் தமிழகத்தின் பங்கான ரூ. 4,073 கோடி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி உதவிக்கான மத்திய அரசின் பங்குத் தொகை நூற்றுக்கணக்கான கோடி, மாநிலத்தில் செய்து முடிக்கப்பட்ட கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி பலநூறு கோடிகளை மத்திய அரசு இதுகாறும் அளிக்காமல் காலம் தாழ்த்தி தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

இதேபோன்று மாநிலங்களின் பங்காக இதுவரை வரிவருவாயில் மாநிலங்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்த 42 சதவிகிதம், 41 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் தமிழக அரசை மேலும் கடுமையான நிதிச்சுமையில் தள்ளுவதோடு, ஒட்டுமொத்த சுமையையும் தமிழக மக்கள் மீது திணிப்பதாகும்.

இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 10,000 மட்டும் ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே அடிக்கல் நாட்டு விழா மேற்கொள்ளப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுவெல்லாம் மத்திய அரசு தமிழக மக்களை ஓரவஞ்சனையோடு நடத்துவதாகும். மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய்ப் போக்கைக் கண்டிக்கிறோம். 

தமிழகத்திற்கான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டுமென்றும், தமிழகத் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும். கடுமையான நெருக்கடி இருந்த போதும் மத்திய அரசு மாநிலத்திற்கு உரிய நிதிப்பங்கை அளிக்காதபோதும் மாநிலத்தை ஆளும் அஇஅதிமுக அரசாங்கம் இதுகுறித்து மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தவோ, விமர்சிக்கவோ செய்யவில்லை. தனது சுயநலத்திற்காக தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டாலும் அமைதி காக்கும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, தமிழக அரசும் மத்திய அரசு தர வேண்டிய நிதிகளைப் பெறுவதற்கு உரிய அழுத்தங்களை அளிக்கவேண்டும்.” என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.