உலகை உலுக்கி எடுத்த சிரியா சிறுவன் புகைப்படம்! காரணமான 3 பேருக்கு 125 ஆண்டுகள் சிறை!

5 வருடங்களுக்கு முன்னர் 3 வயது குழந்தை இறந்து போன வழக்கில், 3 பேருக்கு 125 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடைபெறுவது மிகவும் சாதாரணமான செய்தியாகும். இந்த போரில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்காக அந்நாட்டு மக்கள் அகதிகளாக ஐரோப்பா நாடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மத்திய தரைக்கடல் வழியாக செல்கின்றனர். பெரும்பாலும் இந்த பயணங்கள் விபத்தில் முடிவடைகின்றன.

2015-ஆம் ஆண்டில் இதேபோன்று 3 வயது குழந்தை உட்பட 12 பேர் மத்திய தரைக்கடல் வழியாக துருக்கி நாட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக இந்த பயணம் விபத்துக்குள்ளாகியது. ஒன்றும் தெரியாத அந்த 3 வயது குழந்தையான அய்லான் குர்தி முகம் புதைந்த நிலையில் இறந்தது.

அகதிகளின் அவல நிலை என்று அந்த குழந்தையின் புகைப்படம் உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுபற்றி பல்வேறு நாடுகளில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விபத்தில் துருக்கி காவல்துறையினர் 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நேற்று இந்த வழக்கு விசாரணையை முழுவதுமாக முடிந்த நிலையில் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட 3 பேருக்கும் 125 வருடங்கள் சிறை தண்டனை விதித்து துருக்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த செய்தியானது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.