மத்திய அமைச்சர் பதவிக்கு தன்னுடைய ஆதரவாளரான வைத்தியலிங்கத்தை நியமிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.
மத்திய அமைச்சர் பதவி! ஓபிஎஸ் மகனுக்கு கேட் போடும் இபிஎஸ்!

நாடாளுமன்றத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக எதிர்கொண்டது. பாஜக போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. அதுவும் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தங்கள் உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க மோடி முடிவு செய்துள்ளார். அதன்படி மக்களவையில் ஒரு எம்பியும் மாநிலங்களவையில் கணிசமான எம்பிக்களையும் வைத்துள்ள அதிமுகவிற்கு ஒரு கேபினட் அல்லது இரண்டு இணை அமைச்சர்கள் கொடுக்க பாஜக தயாராகியுள்ளது.
இரண்டு இணை அமைச்சர் பதவி என்றால் ஒன்று ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் மற்றொன்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் வைத்திய லிங்கத்திற்கும் என்று முடிவாகி உள்ளது. ஆனால் வைத்தியலிங்கத்தை கேபினட் அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறார். அதிமுகவில் உள்ள சீனியரான வைத்தியலிங்கம் மத்திய கேபினட் அமைச்சராக இருப்பது தான் சரியாக இருக்கும் என்று பாஜக வுடன் எடப்பாடி தரப்பு பேசி வருவதாக சொல்கிறார்கள்.
கடந்த 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த அனுபவம் வைத்தியலிங்கத்தை இருப்பதாகவும் எனவே அவரை கேபினட் அமைச்சராக நியமிக்க வேண்டுமென்றும் மோடியிடம் எடப்பாடி தரப்பில் மிகத் தீவிரமாக லாபி செய்யப்பட்டு வருகிறது. கேபினட் பொறுப்பு என்றால் மத்திய அமைச்சரவையில் ஒருவருக்கு மட்டுமே இடம் கொடுக்க முடியும் என்று பாஜக திட்டவட்டமாக கூறி விட்டதாக சொல்கிறார்கள்.
பரவாயில்லை ஒன்றாக இருந்தாலும் அதை வைத்து லிங்கத்திற்கு கொடுத்துவிடுங்கள் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால் தனது மகளை எப்படியும் மத்திய அமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்று ஓபிஎஸ் தவம் கிடக்கிறார். கேபினட் அமைச்சர் பதவிக்கு வசித்து வந்த ஓபிஎஸ் தற்போது இணை அமைச்சர் பதவி கிடைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய டெல்லி தொடர்புகளை முடுக்கி விட்டுள்ளார்.
இதனால் மத்திய அமைச்சர் பதவி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் கிடைக்குமா அல்லது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் வைத்தியத்திற்கு கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் நடவடிக்கை ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்து விடக்கூடாது என்பது போலிருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.