கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? தீபத்தில் இத்தனை வகைகளா? அற்புத பலன்கள்!

தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் கலந்தது ஆகும்.


நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கென்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.

மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனி கிரக தோஷம் விலகும்.

கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டும். திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தீபங்களை எந்தெந்த இடங்களில் எத்தனை தீபங்கள் ஏற்றுவது என விரிவாக பார்க்கலாம். தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம்.

தீபஜோதியே நமோ நம : சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம: தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும் ஸ்லோகம். கோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து விளக்குகள் – லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

திண்ணைகளில் : நான்கு விளக்குகள் – வீட்டில் தீய சக்திகள் அண்டாது

மாடக்குழிகளில் : இரண்டு விளக்குகள் – நற்பலன்களைத் தரும்

நிலைப்படியில் : இரண்டு விளக்குகள்

நடைகளில் : இரண்டு விளக்குகள்

முற்றத்தில் : நான்கு விளக்குகள்

பூஜையறையில் : இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்களங்கள் உண்டாகும்.

சமையல் அறையில் : ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்னதோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் : எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

தீபத்தில் பலவகைகள் உண்டு. அவை :

சித்திர தீபம் : வீட்டின் தரையில் வண்ணப்பொடிகளால் சித்திரக் கோலமிட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்திர தீபமாகும்.

மாலா தீபம் : அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபமாகும்.

ஆகாச தீபம் : வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

படகு தீபம் : கங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபமாகும்.

ஜல தீபம்: தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

சர்வ தீபம் : வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

மோட்ச தீபம் : முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோவில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபமாகும்.

சர்வாலய தீபம் : கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

அகண்ட தீபம் : மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபமாகும்.

லட்ச தீபம் : ஒரு லட்சம் விளக்குகளால் கோவிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.

மாவிளக்கு தீபம் : அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபமாகும். காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை களில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு.